Sunday 3 April 2011

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-1- நன்றி ஆனந்த விகடன்

சொல்வனம்!

நீலச் சிலுவை சாபங்கள்

நிலைமை ஒருநாள் தலைகீழானது
வனங்களின் ஆட்சியின் கீழ் வந்தன நவீனப் பெருநகரங்கள்
விருட்சங்களின் கால்களில் விழுந்து கதறுகின்றன கட்டடங்கள்
உடைகள் இன்றி கொத்துக்கொத்தாகத்
தொங்குகிறீர்கள் கோழிகளின் சைக்கிள்களில்
நறுக்கப்பட்ட மனித விரல்கள் கோத்த சரங்களைச் சார்த்தி
துவங்குகிறது ஐந்தறிவுக் கோயிலின் பூசை
தங்கள் வாடிக்கையாளர்களிடம்
நெஞ்செலும்பு நல்லதெனச் சொன்னபடியே
லாகவமாக உங்கள் தோலை அகற்றும் வெள்ளாடுகள்
(மர்ம உறுப்புகளையும் கேட்டு வாங்குமொரு கும்பல்)
பூஞ்செடிகளின் மரண ஊர்வலத்தில்
வழியெங்கும் தூவத் தேவை
நூற்றுக்கணக்கிலான காது மடல்கள்
இளகிய மனங்கொண்ட பூனைகள்
மனிதக் குட்டிகளை வளர்க்கக்கூடும்
கதியின்றி நடுத் தெருவில் தோழியைப் புணருகையில்
கல்லெறியாமல் உங்களைக் கடக்கட்டும் நாய்கள்!

- இளையநிலா ஜான்சுந்தர்

லட்சுமிக் குட்டி
தேதோ
காரணம் சொல்லி
எல்லாக் குழந்தைகளையும்
அனுப்பிவிட்டு
லட்சுமிக் குட்டிக்கு
அதிரசம் தந்தாள் அம்மா
உறங்கிக்கொண்டு இருந்த
எல்லா பொம்மைகளையும்
எழுப்பி
ஊட்டிவிடத் தொடங்கினாள்
லட்சுமிக் குட்டி!

'ஏழும் மூணும் எத்தன?
இருபதுல
ஆறு போனா எத்தன?’
எனக்
கேள்விகளை
வீசிக்கொண்டு இருந்த
ஆசிரியரிடம்
கேட்பதற்கு
ஒரு கேள்வி இருந்தது
குழந்தையிடம்
'வண்ணத்துப்பூச்சிக்கு
கலர் அடிச்சது யாரு?’
- கண்மணிராசா
மரணத்தின் முன் ஏற்பாடுகள்
ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்
அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்
தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்
பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்
'எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி
எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்
தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க...
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!
- ஆர்.எஸ்.பாலமுருகன்

 

1 comments:

ilayanilajohnsundar said...

நன்றி நண்பர்களே!

Post a Comment