Friday 1 July 2011

ஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி!!!

''நானும் விகடனும்!''
பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!


''முதன்முதலில் விகடனை நான் அம்மாவின் கைப்பையில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஆறு, ஏழு வயது இருக்கும். ஆ..ன...ந்...த வி...க...ட...ன் என்ற எழுத்துக்களுக்கு அருகில் தலையில் கொம்புடன் சிரிக்கிற அந்த விகடன் தாத்தா படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யம். அந்த வயதில் விநோதமாகத் தெரிந்த 'விகடன்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது. தாத்தாவுக்கு ஏன் கொம்பு என்பதும் புரிய வில்லை. ஆனால், பிடித்திருந்தது.
அப்போது நாட்டரசன்கோட்டை என்கிற சிற்றூரில் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தார்கள். வெளியூரில் பத்தாவது வரை படித்துவிட்டு, கோடை விடுமுறைக்கு நாட்டரசன்கோட்டை வந்தேன். அப்போது பாலிடெக்னிக்கில் படிக்க விரும்பினேன். அஞ்சலகம் ஊரின் இன்னொரு மூலையில் இருந்தது. தபால்காரர் வரும் வரையில் காத்திருக்க முடியாது. கட்டு பிரிக்கும்போதே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்பதற்காக, காலையில் 10 மணிக்கே அஞ்சலகம் சென்று காத்துஇருந்தேன். 10 மணிக் கட்டில் தபால் இல்லை. அடுத்த கட்டு சிவகங்கையில் இருந்து வரும் 12 மணி பஸ்ஸில் வரும். இடையில் இரண்டு மணி நேரம் என்ன செய்வது?
நாயம்மா குளக்கரையில் காத்திருக்கலாம். அந்த எரிக்கும் வெயிலில் மனித நடமாட்டமே இருக்காது. வழக்கு மொழியில் சொல்வது என்றால், ஒரு சுடுகுஞ்சுகூட இருக்காது. அப்போதுதான் எதிரில் 'பாரதி வாசக சாலை’ என்று நீலப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் அச்சடிக்கப்பட்ட பலகை இருந்தது. அந்த சுற்றுச்சுவரின் மூலையில் முதல் மாடியில் ஓடுகள் வேயப்பட்ட அந்த வாசக சாலை இருந்தது.
படிகளில் ஏறி மாடிக்கு வந்தேன். உள்ளே ஒரு பெரியவர் மட்டும் ஏதோ படித்துக்கொண்டு இருந்தார். சுவரின் இரு பக்கமும் தரையில் உட்காரும் வகையில் பந்திப் பாய் விரித்து, அதன் மேல் புத்தகங் கள் வைக்கப்பட்டு இருந்தன. அவை காற்றில் பறந்துவிடாமல் இருக்க, அதன் மேல் மரத் துண்டுகள். உள்ளே நுழைந்தேன். மரத் துண்டுகளை மீறி பத்திரிகையின் நுனி காற்றில் படபடத்துக்கொண்டு இருந் தது. எடுத்துப் பார்த்தேன். ஓர் ஆன்மிக மலர். நகர்ந்து உட்கார்ந்து, அடுத்த இதழை எடுத்தேன். கொம்புவைத்த தாத்தா 10 வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்தார். அதே பழகிய சிரிப்பு!
அந்த வயதில் திரும்பவும் அறிமுகமான விகடனில் எனக்குப் பிடித்தவை எல்லாம் நகைச்சுவைத் துணுக்குகள். விண்ணப்பம் வந்து காரைக்குடி கல்லூரியில் சேர்ந்தேன். விடுதியில் 'அருவை தங்கராஜ்’ என்ற நண்பன் இருந்தான். வருகிற வாரப் பத்திரிகைகள் எல்லாம் வாங்கி, வாசகர் கடிதம் எழுதுவான். அவன் அறைக்குப் போனால், எல்லா இதழ்களும் படிக்கலாம். பக்கத்து அறையில் செல்வ பாண்டியன் என்ற நண்பன் இருந்தான். விகடனில் மணியம் செல்வன் வரைகிற பெண்களை அப்படியே வரைந்து காட்டுவான். எனக்கும் வரையத் தெரியும் என்பதால், நானும் அவனும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தோம். விகடன்தான் மாதிரி.
அந்தப் பருவத்தில் விகடனின் சினிமா விமர்சனம் பிடிக்கும். காரைக்குடியில் ஒரு படம் வெளியாகிற அன்றே பார்த்துவிட்டு, அதன் குறை, நிறைகளை யோசித்து மனதுக்குள் மதிப்பெண் போட்டு விகடன் விமர்சனம் வந்ததும் அதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஓர் இனிமையான பயிற்சியாக இருந்தது. அப்போது விகடன் மாணவர் நிருபர் திட்டத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், கிடைக்கவில்லை.
கல்லூரி முடிந்து திரும்பவும் நாட்டரசன்கோட்டை. அப்போது எங்கள் வீட்டுக்கு அருகிலேயே செங்கமலத்தான் தெருவில் நூலகம் இருந்தது. 8 மணிக்கு நூலகம் திறக்கும். வெள்ளிக்கிழமை ஆனதும் திறக்கும்போதே நுழைந்தால்தான், விகடன் கிடைக்கும். கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழைந்தால், அவ்வளவுதான். சன்னமாக பழைய தமிழ்ப் பாடல்களை விசிலடித்துக்கொண்டே கையைப் பின்னால் கட்டிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிற நூலகர், 'என்ன தம்பி விகடனா?மதியம்தான்!’ என்று நக்கலாகச் சிரிப்பார். பார்த்தால், ஆம்பிளைச் சட்டை போட்டு நீளப் பாவாடை அணிந்த என் வயதுப் பெண் ஒருத்தி, வரிவிடாமல் விகடன் படித்துக்கொண்டு இருப்பாள். இடையிடையே முகட்டைப் பார்த்து யோசிப்பாள். திரும்பவும் படிப்பாள். நகம் கடிப்பாள். அவள் படித்து முடித்ததும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வருவார்கள். வணக்கம் சொல்லி விடைபெற்று, மறு நாள் தான் விகடன் படிக்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் நான் தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருநாள் நான் முன்பே சென்று விகடனைக் கைப்பற்றினேன். அந்தப் பெண் வந்தாள். அவசர மாகக் கையெழுத்தைக் கிறுக்கி விட்டு, பத்திரிகைகள் கிடைக் கும் மேசைக்கு வந்து வேகமாகத் தேடினாள். நான் விகடனை நடு மேசையில் ஒரு செய்தித்தாளை வைத்து மூடி வைத்து இருந்தேன். அவள் பரபரப்பாகத் தேடுகிற கணத்தில், செய்தித்தாளை எடுத்தேன். பார்த்ததும் பாய்ந்து அவள் எடுக்க, நானும் எடுக்க, இருவர் கையிலும் விகடன். அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம். நான் விட்டுக்கொடுத்தேன். அவள் முகத்தில் இருந்த மொத்தக் கோபமும் புன்னகையாக மாறிய தருணம். தம்...தன...னம்...தன...
வேலைக்குப் போக விரும்பாமல், கவிதைகள், கதைகள் எழுதத் துவங்கி இருந்தேன். விடாமல் சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். விகடனுக்கு அனுப்பிய எதுவும் பிரசுரமாகவில்லை. எல்லாம் 'ஏ...பெண்ணே...’ அல்லது. 'ஓ... நிலவே...’ என்று மூன்று புள்ளிகள் கண்டிப்பாக இருக்கும் புதுக் கவிதைகள். செட்டிநாட்டில் மணமக்களை வாழ்த்திக் கவிதை எழுதி, அதை அச்சிட்டு திருமண வீட்டில் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அதற்கு கலி விருத்தம், ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுதித் தருவேன். 'வாழ்த்துப்பா ஆக்கம்’ என்று பெயர் போட்டு, 1,000 பிரதிகள் அச்சிடுவார்கள். அச்சில் என் பெயரைப் பார்க்க அது ஒன்றுதான் வாய்ப்பு. ஒருமுறை நானும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அருகில் வந்த பெண், 'டீச்சர்... மூத்தவன்தானே. எங்க வேலை பாக்குறான்?’ உடனே அருகில் இருந்த பெரியவர், 'இவனா? கவிதை எழுதுறான்... ஹஹ்...’ என்று சிரித்தார். அன்று வீடு திரும்பும் வரை அம்மா பேசவே இல்லை. இரவு சாப்பிட்ட பிறகு, 'அம்மா சொல்றேன்னு கோபப்படாத... இதெல்லாம் வேலைக்குப் போயிட்டே செய்யலாமேப்பா’ என்று சொல்கையில், அம்மா வின் கண்கள் கலங்கி இருந்தன. ஒரு முறை விகடனில் பெயர் வந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினேன்.
இதற்கிடையில் 'அன்னம்’ கதிரின் நட்பினால், தீவிர இலக்கியம், கோணங்கி கொண்டுவந்த 'பதேர் பாஞ்சாலி’, மதுரை நண்பர்கள் திரையிட்ட 'பை சைக்கிள் தீவ்ஸ்’, தூர்தர்ஷனில் மதிய நேரத்தில் வருகிற விருதுப் படங்கள் பார்க்கத் துவங்கி இருந்தேன். வாய்ப்பு தேடி சென்னை வந்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் நல்ல படங்கள் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறு பத்திரிகைகளில் எழுதத் துவங்கி இருந்தேன். எனது ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமிடம்  உதவியாளனாகச் சேர்ந்தேன்.
அப்போது என்னைப் பார்க்க வந்த பழைய நண்பர் ஒருவர், 'என்னடா கதையெல்லாம் எழுதுறியாம்... சொல்றாய்ங்க... எதுல எழுதுற?’ என்றார். 'சிறுபத்திரிகையில...’ என்றதும் சிரித்தார். 'அது நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல கெடைக்குமா?’, 'இல்ல’, 'பின்ன... நீயே எழுதி, நீயே படிப்பியா? விகடன் மாதிரி பெரிய பத்திரிகைல எழுதுடா...’ என்றார்.
எழுதலாம் என உத்தேசித்து, ஒரு கதை எழுதி அனுப்பினேன். அப்போது எனது திருமணம் நிச்சயமான சமயம். கதை பிரசுரத்துக்குத் தேர்வானதாகக் கடிதம் வந்தது. வருங்கால மனைவி பிரேமாவிடம் பெருமையாகச் சொன்னேன். 'எப்ப வரும்?’ 'சீக்கிரம் வந்திரும்...’ பிரேமா அன்று முதல் தொடர்ச்சியாக விகடன் வாங்கி, 'அவரே எழுதுன கதை விகடன்ல வருதாம்...’ என்று எல்லோரிடமும் பெருமை பேசி, கதை பிரசுரமானபோது... எங்கள் பையனுக்கு ஒரு வயது.
பி.சி.ஸ்ரீராம் சாரிடம் உதவியாளனாக இருக்கும்போது அவருக்குக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆனால், பத்திரிகைகளில் எழுதுகிற விஷயம் அவருக்குத் தெரியாது. அப்போது நண்பர் அருள் எழிலன் 'விகடன் காதல் சிறப்பிதழ்’க்காக என்னிடம் சிறுசிறு கவிதைகள் கேட்டார். கொடுத்தேன். அடுத்த வாரமே விகடனில் வந்தது. அந்தக் கவிதைகளை இதழ் முழுக்கப் போட்டு கடைசிப் பக்கத்தில்தான், எழுதிய என் பெயர் இருந்தது. அன்று அலுவலகம் போனதும் பி.சி. சார் என்னை அழைத்து 'விகடன் பார்த்தேன்... கவிதையில நல்ல விஷ§வல் சென்ஸ் இருக்கே. யாரு எழுதி இருப்பா... நீயா இருக்கும்னு நினைச்சேன்.. பார்த்தா, நீயேதான்’ என்றார். 'எழுத்தோட வலிமையை ஃபிரேம்ல கொண்டு வர்றதுதான் சவால்... அது... உன்னால முடியும்’ என்றார். பெருமையாக இருந்தது.
எனது சிறுகதைக்கு 'கதா’ விருது வாங்கியதும் இரண்டு பக்கங்களில் எனது படத்துடன் செய்தி விகடனில் வந்தது. பிறகு, விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர் களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. அதற்காக மும்பை சென்று இருந்தோம். இயக்குநர் ராமனந்த சாகர், நடிகர் அசோக் குமார் இருவரும் 'விகடன்’ என்று சொன் னதும் எழுந்து நின்று எங்களை வணங்கி மரியாதை செய்தது மறக்க முடியாத அனுபவம். விகடன் ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்ததையும், 'பாஸ்’ என்று எல்லோரும் அழைக்கிற திரு.வாசன் அவர்களின் ஆளுமையையும் உடன் இருந்து பணிபுரிந்த அவர்கள் சொல்கையில் பிரமிப்பாக இருந்தது.
அவ்வளவு பெருமைக்குரிய விகடனில் இருந்து ஒருநாள் ரா.கண்ணன் அழைத்தார். ஒரு காதல் கவிதைத் தொடர் எழுதும்படி கேட்டார். 'சினிமாவைப் பற்றி எதாவது எழுதலாமே’ என்றேன். 'இதையே சினிமாவை மாதிரி எழுதுங்க பாஸ்’ என்றார். அதாவது, 'எழுதும் விஷயத்துக்குப் படமும் நீங்களே எடுக்க வேண்டும்’ என்றார். இந்த சுவாரஸ்யமான சவால்தான் வெற்றிகரமான 'வந்த நாள் முதல்...’ தொடராக வந்தது. நான் சொன்னதை நினைவில்வைத்து, தொடர்ந்து திரும்பவும் கண்ணன் அழைத்தார். நான் நேசிக்கிற உலகத்தின் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும் வாய்ப்பு வந்தது.
'உலக சினிமா’ தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வெளியானது. ஒரு திரைப்படக் கல்லூரி தர முடியாத மிகத் தீவிரமான பயிற்சியை இந்தத் தொடர் மூலம் விகடன் எனக்கு வழங்கியது. இன்றைக்குக் கிராமங்களில் இருக்கிறவர்களுக்குக்கூட உலக சினிமா அறிமுகமாகி இருக்கிறது. நல்ல சினிமாவை அறிமுகப்படுத்துவதன் வழியாக திரைப்பட ரசனையில் முக்கிய மான மாற்றத்தினை இந்தத் தொடர் மூலம் விகடன் நிகழ்த்தியது. அத்தகைய முயற்சியில் நானும் இருந்திருக்கிறேன் என்பதே பெருமை. ஒரு முறை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உலக சினிமாபற்றி என்னிடம் சொல்கையில், 'நிலைகுத்தி இருந்த தேரை ஒத்த ஆளா கட்டி இழுத்திட்டியே...’ என்றார். அதற்கு விகடன் தந்த சுதந்திரம்தான் முக்கியமானது.
இதுபோல எந்தப் பின்னணியும் இல்லாமல், சென்னை வந்த என்னைப் போல பல இளைஞர்களின் தகுதியையும் திறமையையும் சரியாகக் கணித்து, வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் இன்றைக்கும் விகடனின் சிறப்பாக இருக்கிறது. இப்போதும் ஒளிப்பதிவாளராக நான் பணிபுரிகிற படங்களின் விமர்சனம் வரும்போது, விகடன் என்ன எழுதும் என்று ஆர்வமாகக் காத்திருப்பேன். எப்போதும் அண்ணா சாலையில் விகடன் அலுவலகத்தைக் கடந்து செல்கையில்,  சொந்த வீட்டைக் கடந்து செல்கிற உணர்வே எனக்குள் ஏற்படுகிறது.
ஒரு திரைப்பட மாணவனாக விகடனிடம் இருந்து எப்போதும் நான் கற்றுக் கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு தரமான வணிகத் திரைப்படம்போல எல்லோரையும் கவர்ந்திழுக்கிற தன்மை விகடனிடம் இருக்கிறது. ஈழப் பிரச்னை குறித்த கட்டுரை கண் கலங்கவைக்கும்; ஒரு சிறுகதை ஈர்க்கும். ஒரு துணுக்கு சிரிக்கவைக்கும். ஒரு திரைப்படத்தின் எடிட்டிங் உத்திபோல சுவாரஸ்யம் குறையாமல் எல்லாப் பக்கங்களையும் படிக்கவைக்கிற, கடைசிப் பக்கத்தில் இருந்து புரட்டினாலும் சுவாரஸ்யம் குறையாத தந்திரம் எது என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்.
சென்ற வருடம் புத்தகக் காட்சிக்கு நானும் எனது மகன் சிபி நந்தனும் சென்றிருந்தோம். இரண்டாவது படிக்கும் அவனுக்கு தமிழ் வாசிக்க நான் கற்றுக் கொடுத்த சமயம் அது.  புத்தகக் காட்சியில் என்னைப் பார்த்ததும் சிலர் கை கொடுத் தார்கள். ஒரு கல்லூரி மாணவி ஓடி வந்து உலக சினிமா புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சிபிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. 'அடப்பாவி... நீ வி.ஐ.பி. ஆயிட்டியா... எப்டி?’ என்று கேட்டான். சிரித்துக்கொண்டே, நான் விகடன் ஸ்டாலைக் காட்டினேன்.
'வி...க...டா... ஆ...இன்... விக...டான்...’
'டான் இல்லப்பா... டன்...’
'அப்பா... அது ஏன் அந்த தாத்தாவுக்கு கொம்பு இருக்கு?’
விகடனின் வசீகரம் தலைமுறை கடந்தும் தொடர்கிறது. தொடரும்!''

Wednesday 29 June 2011

ரைட் பிரதர்ஸ்[Wright brothers]

 மனித இனம் தோன்றியது முதலே கற்பனையிலும்,  கதைகளிலும் இப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என சிந்திக்கத் தூண்டிய  விஷயம் விண்ணில் பறப்பதாகும். வானில் பறவைகள் பறப்பதை மனிதன் என்று கண்டானோ... அன்றே பறக்கும் ஆசை தோன்றிவிட்டது.

பல நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற அமெரிக்காவில் பிறந்தனர், 'ரைட் பிரதர்ஸ்’ என்று அறியப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட். சிறுவர்களாக இருந்தபோது, ஒரு முறை இவர்களின் அப்பா சீன பொம்மை ஒன்றை வாங்கி வந்தார். அதில் தலைப் பகுதியில் மூன்று விசிறிகள் இருக்கும். அதனுடன் இணைக்கப்பட்டு  இருந்த ரப்பர் பட்டையை இழுத்து விட்டால், அது உயரே பறக்கும். விசிறியின் வேகம் குறைந்த உடன் கீழே வரும். கொஞ்ச நாட்களில் அது பழுதாகிவிட்டது. உடனே இவர்களே புதிதாக ஒன்றை வடிவமைத்து  விளையாடினார்கள்.
ரைட் சகோதரர்கள் முறைப்படி உயர்கல்வி கற்கவில்லை. 1892-ல் சைக்கிள் விற்பனை நிலையத்தைத்  தொடங்கினர்.  1896-ல் மிகவும் பாதுகாப்பான சைக்கிள்களை உற்பத்தியும் செய்தனர். ஆனாலும்,  அவர்கள் சிந்தனை முழுவதும் பறக்கும் இயந்திரத்தை வடிவமைப் பதிலேயே இருந்தது.
அந்த நாட்களில்... பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சிறிய கிளைடர் விமானங்களைப் போல உருவாக்கிப் பறந்து, அதில் பல்வேறு ஆராய்ச்சி களைச் செய்துவந்தனர். அந்த முயற்சிகளில் ஏற்பட்ட விபத்தில்... சிலர் இறந்தனர். அனைத்துக்கும் மேலாக ஜெர்மனியின் 'ஆட்டோ லிலியந்தால்’ என்பவர், தனது இரண்டு கைகளிலும் றெக்கை போன்ற அமைப்பைக் கட்டிக்  கொண்டு, அதில் சிறிய இயந்திரங்களைப் பொருத்தி, உயரமான இடங்களில் இருந்து குதித்து, பலமுறை வானில் பறந்தார். ஓவ்வொரு முறையும் இயந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினார். ஆனாலும், அவரது பயணங்கள் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தன. அப்படி ஒரு முறை பறந்தபோது, உயரத்தைச் சரியாகக் கணிக்காததால் நேர்ந்த விபத்தில் லிலியந்தால் இறந்தார்.
ரைட் சகோதரர்கள் இதற்கு எல்லாம் அசர வில்லை. பறவைகள் பறக்கும்போது அதன் உடல் அமைப்பு, வால் மற்றும் றெக்கைகள் எப்படி செயல்படுகின்றன என்றும், காற்றின் போக்கு... பறவைகள் தடங்கல் இன்றிப் பறக்க எப்படி உதவுகிறது என்றும் ஆராய்ந்தனர். 1900-ஆம் ஆண்டு, பெட்டி வடிவிலான ஒரு விமானத்தைச் செய்து முடித்தார்கள். 'கிட்டி ஹாக்’ என்ற கடற்கரைப் பகுதியில் இவர்களது முதல் வான் பயணம் நிகழ்ந்தது.
பயணத்துக்கு முன் ஏற்பட்ட  பெரும் மணல் புயலில், விமானம் பதினைந்து அடி ஆழத்தில் புதையுண்டுவிட்டது. அதைத் தோண்டி எடுத்துப் பறக்க விடுவதற்கான ஆயத்தத்தைச் செய்தனர். காற்றின் வாட்டத்திலேயே விமானம் பறக்க விடப்பட்டது. அதன் சுக்கான் முனையை இரும்புச் சங்கிலியில் பிணைத்திருந்தனர். தரையில் இருந்தபடியே விமானத்தை அவர்களால் சங்கிலியின் மூலம் கட்டுப்படுத்தி மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் முடிந்தது. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
நீண்ட பெட்டி வடிவில் இருந்த அந்த விமானத்தின் மையத்தில், ரைட் சகோதரர்களில் ஒருவர் கம்பி களைக் கெட்டியாகப் பிடித்து படுத்துக்கொள்ள, மற்றவர் நண்பரின் உதவியுடன்  விமானத்தின் இரண்டு றெக்கைகளைப் பிடித்து இழுத்தபடி ஓடுவார்கள். றெக்கைகளின் இடையில் காற்று சென்று, விமானத்தை உயரே தூக்கிப் பறக்க  வைக்கும். இப்படி மேலே எழும்பிய விமானம், சற்று தூரம் பறந்த பின், மணலில் மெத்தென்று கீழே இறங்கும். இப்படி பல முறை பறந்தார்கள். காற்றின் போக்கு குறைந்ததும் ஊருக்குத் திரும்பினார்கள்.
அடுத்த ஆண்டு, இன்னும் சிறப்பான இயந்திரத்துடன் மீண்டும் 'கிட்டி ஹாக்’ வந்தார்கள். இந்த முறையும் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், வானில் தொடர்ந்து அதிக நேரம் பறந்தவர்கள் என்ற சாதனையை எட்டினர். ஒவ்வொரு முறை பறக்கும்போதும் சோதனைகள்! இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றே ஊருக்குத் திரும்பினார்கள்.
சைக்கிள் தொழிலில்  மீண்டும் ஆர்வத்து டன் ஈடுபட்டார்கள். வில்பர், இதுவரை தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறிப்புகளாக எழுதினார். அவற்றில் இருந்து 'பெர்னோலி’யின் விதியின்படி காற்றானது விமானத்தை எப்படி பறக்க வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விமானத்தில் மேலும் செய்ய வேண்டிய சில மாறுதல்களும் புரிந்தது.
இறுதியில், டிசம்பர்-14 1903-ல் மீண்டும் கிட்டி ஹாக் நோக்கிக் கிளம்பினார்கள். விமானம் பறக்கத் தயாரானது. யார் பறப்பது என்று பூவா தலையா போட்டதில் வில்பர் ஜெயித்தார். தண்ட வாளத்தின் மீது நிறுத்தி இருந்த விமானத்தை ஆர்வில் இழுத்துக் கொண்டு ஓடினார். விமானத்தின் இயந்திரங்கள் இயங்கத் தொடங்கின. மூன்று நொடிகளே பறந்த விமானம்... தரையில் மோதி விழுந்தது. எனினும் வெற்றியை நெருங்கிவிட்டதை உணர்ந்தனர்.
விமானத்தைச் சரி செய்து, டிசம்பர் 17-ல் மீண்டும் பறக்கச் செய்தார்கள். அவர்களே எதிர்பார்க்காத வகையில் எண்ணூறு அடிகளுக் கும் அதிகமான தூரம் விமானம் பறந்தது. ரைட் சகோதரர்கள் வானத்தை வெற்றிகொண்ட சம்பவம் சரித்திரத்தில் பதிவானது.  
எத்தனை முறை தோல்வி அடைந்தாலும், ஒவ்வொரு முறையும் அதில் இருந்து பாடம் கற்று, வான்வெளியை  வெற்றி கொண்ட சகோதரர் களின் விடாமுயற்சி

அம்பேத்கார்[B. R. Ambedkar]


மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார் பீமாராவ். தாழ்த்தப்பட்ட இனமான மகர் இனத்துப் பெற்றோர் களுக்கு, இவர் பதினான்காவது குழந் தையாகப் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேலை பார்த்து வந்தார். அந்நாட்களில்... தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். பீமாராவின் தந்தை, தன் மகனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என முடிவு செய்தார்.

அதற்காக ஆங்கிலேய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, தன் மகனை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளி ஆசிரியர், பீமாராவ் என்ற பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரையும் சேர்த்துவைத்தார். அது முதல் அவர் அம்பேத்கர் ஆனார்.

அந்தக் காலத்தில், பள்ளியில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இருக்கைகள் உண்டு. தாழ்த்தப்பட்ட குலத்தவர்களுக்கு இருக்கைகள் கிடையாது. வீட்டிலிருந்தே ஒரு கோணியை எடுத்துச் சென்று, அதன்மீதுதான் உட்கார்ந்து படிக்க வேண்டும். ஆனால், கல்வி ஒன்றுதான் தங்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். எனவே, பள்ளியில் மற்ற மாணவர்கள் இவரை என்னதான் இழிவுபடுத்தினாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை, தீவிரமாகப் படித்தார்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களில்... அந்தப் பகுதியில் இவரே முதல் முதலில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். அவரது வெற்றியை, அந்த இனத்தின் வெற்றியாக மக்கள் கொண்டாடினார்கள். அம்பேத்கர் மேல் படிப்புப் படிக்க கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும். அதற்கு நிறைய செலவாகும்...  என்ன வழி என்று யோசித்த அம்பேத்கருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது, பரோடாவின் அரசர் சாயாஜிராவ் கெய்க்வாட் தாழ்த்தப்பட்ட மாணவரின் கல்விச் செலவுகளுக்கு பணஉதவி செய்வார் என்பதுதான். எத்தனை இடர்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று மன உறுதியுடன் இருந்த அம்பேத்கருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சி அளித்தது.
பரோடா மன்னரைச் சந்தித்து, அவரிடம் பெற்ற உதவியின் மூலம்... புகழ்பெற்ற எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். உடன் படித்தவர்கள், அவருடன் சகஜமாகப்  பழகமாட்டார்கள். இருந்தாலும் அம்பேத்கர் எதையும் பொருட்படுத்தாமல், தனது பெரும்பாலான நேரத்தை நூலகத்துக்குச் சென்று படிப்பதற்குச் செலவு செய்தார்.

பரோடா மன்னரின் உதவி மற்றும் கோல்காபூர் அரசரின் உதவிகளைப் பெற்று அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்பேத்கர் தனது மேல் படிப்புகளைத் தொடர்ந்தார். 'பார் அட் லா’ பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார். அந்தச் சமயத்தில், இந்தியாவில் சுதந்திரப் போர் வெகு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்கள் விடுதலை பெறுவது எத்தனை முக்கியமோ, அதேபோல இந்தியாவில் இருக்கும் சாதி வேறுபாடுகளைக் களைவதும் முக்கியம் என்ற கொள்கையுடன் செயல்பட்டார் அம்பேத்கர்.
இவருடைய போராட்டங்களால் காந்திஜியின் பெயரைப் போலவே, இவரது பெயரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பேசப்பட்டது. லண்டனில் 1930ல் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்திஜியுடன் இவரும் கலந்துகொண்டார். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்றது. நமக்கான சட்டங்களை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று நேருஜியின் தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்தது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, சரியான நபர் அம்பேத்கர்தான் என முடிவுசெய்தனர். தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, அதற்கேற்ப நமது அரசியலமைப்புச் சட்டத்தை சிறப்பாக உருவாக்கித் தந்தார் அம்பேத்கர். அதேபோல பூனா ஒப்பந்தத்தின் மூலம் தேர்தலில் 'தனித் தொகுதி’ முறையைக் கொண்டுவந்தார். இதன் மூலம், தாழ்ந்த இனத்தவரின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என நம்பினார்.

வாழ்நாள் முழுவதும் தன் இன மேன்மைக்காகப் போராடியதும்... எந்த ஓர் இன்னலையும் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் உதவியைப் பெற்றாவது கல்வி கற்க வேண்டும். கல்விதான் ஒருவனை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற உறுதியுடன் போராடி கல்வி கற்றவர்.

லூயிஸ் பிரெய்ல்[ Louis Braille]

 அவருக்கு கண் பார்வை கிடையாது. இருந்தாலும், தனது கண்டு பிடிப்பால் பார்வைத் திறனற்ற பலரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டி இருக்கிறார். அவர்தான் லூயிஸ் பிரெய்ல். அவர் கண்டுபிடித்ததுதான் பிரெய்ல் எழுத்துமுறை.  
லூயிஸ் பிரெய்ல், மூன்று வயதில் அப்பாவின் தொழில் சார்ந்த உபகரணங் களை வைத்து விளை யாடிக்கொண்டிருந் தான். அப்போது, எதிர்பாராத விதமாக அவனது கண்ணில் கூர்மையான ஆணி குத்திவிட்டது. அதனால், அந்தக் கண்ணின் பார்வை பறிபோனது. உரிய  சிகிச்சை அளிக்கா ததால் கொஞ்ச நாட்களில் அவனது இரண்டாவது கண்ணின் பார்வை யும் போய் விட்டது.

கண் பார்வை முழுவதும் பறிபோனதால், பிரெய்லின் பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு... பிரெய்லை பாரீஸில், பார்வையற்றோருக்கு என செயல்பட்டு வந்த சிறப்புப் பள்ளியான 'ராயல் இன்ஸ்டிடிட்யூட்’டில் சேர்த்தனர்.
அங்கு, கல்வி என்பது வாய் மற்றும் செவிவழிக் கல்வியாகவே இருந்தது. ஒருவர் படித்துக் காட்ட, அவற்றை மனப் பாடம் செய்து படிக்கவேண்டும். மேலும், பார்வையற்றோர் படிப்பதற்கு அச்ச டிக்கப்பட்ட புத்தகங்கள்  'புடைப்பு’ முறையில் அச்சடிக்கப் பட்டு இருந்தன. அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் சற்று மேடாக அச்சாகி இருக்கும். இதனால், புத்தகங்கள் மிகவும் தடிமனாகவும். கனமாகவும், எளிதில் எடுத்துச் செல்ல இயலாத வகையிலும் இருந்தன. மேலும், இந்தவகை எழுத்து களைப் பார்வை அற்றவர்கள் எளிதில் எழுதவும் முடியாது.  
இந்தப் புத்தகங் களைப் பயன்படுத்தித் தனது கல்வியைத் தொடர்ந்த பிரெய்ல், பார்வையற்றோர் சிக்கல் இன்றி எளிதில் படிக்கவும், புரிந்து கொள்ளவும், எழுதவும் எளிதான ஒரு முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று, நாளும் பொழுதும் உழைக்கத் தொடங் கினான்.
அந்தச் சமயத்தில், பிரெஞ்சு ராணுவத்தினர் தங்களுக்குள் ரகசியத் தகவல்களை அனுப்ப 'சார்லஸ் பார்பியர்’ என்ற ராணுவ அதிகாரி உருவாக்கிய எழுத்து முறையைப் பயன்படுத்திவந்தார்கள். இந்த சங்கேத எழுத்து முறையை ராணுவ வீரர்கள் இருளில்கூட கைகளால் தடவிப் பார்த்து எளிதாகப் புரிந்து கொண்டார்கள். இந்த எழுத்து பற்றி அறிந்த லூயிஸ் பிரெய்ல், இந்த எழுத்து முறையின் அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் இருந்து பார்வை அற்றோர் எளிதில் புரிந்துகொள்ளும் புதியதொரு எழுத்துரு வகையை உருவாக்க முடியும் என முடிவு செய்தார்.  
ஆறு புள்ளிகளை சற்று மேடாக அமைத்து, பிரெய்ல் தனது கடின உழைப்பால் 1825-ஆம் ஆண்டு பார்வையற்ற வர்களுக்கான புதிய எழுத்து முறையைக் கண்டுபிடித்தார். அதை, தான் படித்த  ராயல் இன்ஸ்டிடிட்யூட் நிறுவனத்துக்கே  அளித்தார். அப்போது, அவருக்கு வயது பதினாறுதான். ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட குறியீட்டின் மூலம் பிரெஞ்சு, ஆங்கில எழுத்துகளை எளிதில் எழுதப் படிக்க முடிந்தது. இருந்தாலும்... பிரெய்லின் இந்த சிறப்பான கண்டுபிடிப்பு, நூறு ஆண்டுகளுக்குப் பிறகே உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது.  
பிரெய்லின் இந்த எழுத்துமுறை, பார்வை அற்றவர்களுக்கு மிகப் பெரும் வரமாக அமைந்தது. எனவேதான், அவரது பெயராலேயே அம்மொழி அழைக்கப்பட்டு வருகிறது.
சிறு வயதிலேயே தனது பார்வையை இழந்துவிட்டபோதிலும், விடாமுயற் சியுடன் கல்வி கற்றதையும்,  தற்செயலாகத் தெரிந்துகொண்ட  ராணுவ ரகசிய எழுத்து முறையைப் பின்பற்றி, பார்வையற்றோர் எளிதில் படிக்க வசதியான, முற்றிலும் எளிதான எழுத்து முறையை உருவாக்கிய முயற்சி போற்றத்தக்கதாகும்.

சர்.சிவி ராமன்[Sir. C. V. Raman]

அந்தக் கல்லூரியின் வகுப்பறையில் நுழைந்த பேராசிரியர், மாணவர்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பையனும் அமர்ந்து  இருப்பதைக் கண்டார். ஏதோ தெரியாமல் அமர்ந்திருக்கிறான் என எண்ணிய அவர், ''நீ என்ன இந்தக் கல்லூரி மாணவனா?'' என்று கேட்டார். அதற்கு அவன் பணிவாக, ''ஆம் ஐயா!'' என்று சொன்னான். ஆச்சர்யம் அடைந்த பேராசிரியர், ''உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அவன் ''ராமன்'' என்றான்.ஆமாம்! அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்.

இவரது பெற்றோர் கணித மேதையும் ஆசிரியருமான சந்திரசேகரன் மற்றும் பார்வதி அம்மையார். சந்திரசேகர வெங்கட்ராமன் என்பதன் சுருக்கமே சி.வி.ராமன். இவர் பி.ஏ. இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்று தேர்வானார். கொல்கத்தாவில் இந்திய நிதித் துறையில் உதவி கணக்குப் பொது மேலாளராக 1907- ல் பதவி ஏற்றார். அப்போதைய ரங்கூன் நகருக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கல்கத்தாவுக்குத் திரும்பினார்.
அந்தச் சமயத்தில் டிராம் வண்டியில் பயணம் செய்தபோது ஒரு கட்டடத்தில் 'விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்தியக் கழகம்’ என்ற பலகை தொங்குவதைக் கண்டார். டிராமில் இருந்து குதித்தார். கட்டடத்தினுள் நுழைந்தார். அங்கே நிறைய அறிவியல் சாதனங்கள், பெரிய ஆராய்ச்சி அறைகள் இருப்பதைக் கண்டார். உடனே அங்கேயே தங்கி, அறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அனுமதியும் பெற்றார். தனது அரசுப் பணியை விட்டு விட்டு, அறிவியல் ஆராய்ச் சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருப்பிடத்தையும் அந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கே மாற்றிக் கொண்டார்.
1921-ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற உலகப் பல்கலைக் கழகங்களின் சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்ற கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

தனது ஒளிச் சிதறல் பற்றிய அறிக்கையைத் தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928-ல் கண்டுபிடித்தார். இதுவே, ராமன் விளைவு. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ராமன். அதனால், அவர் நவம்பர் மாதம் நடக்கப்போகும் விழாவுக்கு ஜூன் மாதத்திலேயே டிக்கெட் பதிவுசெய்து விட்டார். அவரது கண்டுபிடிப்பின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை. நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். அதுவும் தவிர, வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு அப்போதுதான் முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு நமது அரசு பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த  பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

Aung San Suu Kyi ஆங் சான் சூ கி.!!!



 அந்த சிறுமியின் அப்பா பர்மிய விடுதலைப் போராட்ட வீரர். அவர், தன் நாட்டில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்தார். சில சதிகாரர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது போராட்டத்தை அவருடைய மனைவி தொடர்ந்தார். தன் கணவரின் போராட்டப் பாதையைத் தனதாக்கி மக்களுக்கு வழிகாட்டினார். அவர் அங்கிருந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் என்று எண்ணி, ஆட்சியாளர்கள்  இந்திய நாட்டுக்கான பர்மியத் தூதராக அவரை அனுப்பிவிட்டனர். அவருடைய குட்டிப் பெண்ணும் அவருடன் டெல்லிக்கு வந்தார்.
டெல்லியில் பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்திய அந்த குட்டிப் பெண், நூலகத்தில் எதிர்பாராமல் கிடைத்த காந்தியடிகளின் நூல்களை விரும்பிப் படித்தாள். அவருடைய எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டாள். அது மட்டுமல்லாமல் தான் இனி காந்திய நெறிகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அப்போது, தான் பல வருடங்கள் மக்களுக்காக போராட வேண்டி இருக்கும். அதனால் சிறையில் வாட வேண்டி இருக்கும். அந்த சந்தர்ப்பத்திலும் காந்தியத்தை  தான் உயர்த்திப் பிடிப்போம்... அந்த காந்திய வழிப் போராட்டத்தாலேயே விடுதலை ஆவோம்... என்றெல்லாம் அவள் நினைத்திருக்கவே மாட்டாள்!
ஆம் சுட்டீஸ்! ஒன்றல்ல, ரெண்டல்ல... இருபது ஆண்டுகளுக்கும் மேல் மியன்மாரில் (பர்மா என்பது பழைய பெயர்) வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ கி. சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவரை டா சூ கி என்றழைக்கிறார்கள். டா என்றால், பர்மிய மொழியில் மிக்க மரியாதைக்குரியவர் என்று பொருள். நிஜமாகவே இந்த பட்டத்துக்கு முழுவதும் தகுதியானவர்தான் நமது சூ கி.

சூ கி, தன் அம்மாவுடன் டெல்லியில் படிக்க வந்த நாள் முதல் காந்திய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று, ஐ.நா.சபையின் உதவிச் செயலர் பணியில் அமர்ந்தார். அமைதியுடன் தன் கணவர் ஏரிஸ் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

தன் தந்தையும் தாயும் மக்களுக்காகப் போராடியதையும், இன்னும் அங்கு மக்கள் ராணுவ ஆட்சியால் துன்பப்படுவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தாயகத்துக்குத் திரும்பினார்.

அந்த சமயத்தில் மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, போராட்டங் களை நடத்தி வந்தனர். அதை ஒடுக்க ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கையால், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்தனர். அவர்களை நினைவு கூறும் விதமாக 1988 ஜூலை 19 அன்று பெரும் போராட்டத்துக்கு  சூ கி அறைகூவல் விடுத்திருந்தார். ஆட்சியாளர்களோ... போராட்டம் நடக்க விடாமல் தடுத்ததோடு, அதற்கடுத்த நாளே அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். இப்படித் தொடங்கிய அவரது வீட்டுச் சிறைவாசம், விட்டு விட்டுத் தொடர்ந்தது இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்ட, தன்னுடன் போராடிய இயக்கத்தவர்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என வீட்டுச் சிறையிலேயே உண்ணாவிரதமும் இருந்தார்.

ஆட்சியாளர்களின் மீது வெளிநாடுகளும் ஐநா சபையும் கொடுத்த நெருக்குதலால், சூ கி யை விடுதலை செய்தது. அதன் பின்னர் இவரை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது. தேர்தல் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக ஆட்சியை அமைப்பது என்றால், தன் போராட்டங்களைக் கைவிடத் தயார் என்று சூ கி அறிவித்தார். வேறு வழி இல்லாத ராணுவ ஆட்சியாளர்களும் தேர்தலை நடத்தினர். அத்தேர்தலில் சூ கி கட்சியினர் மிகப் பெரும்பான் மையான இடங்களைக் கைப்பற்றினர்.

ஆனால், அவர்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புத் தராமல், மீண்டும் ராணுவ ஆட்சியே தொடர்ந்தது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபையின் வேண்டுகோளைக் கூட புறக்கணித்தனர் ஆட்சியாளர்கள். 1991-ஆம் ஆண்டு நோபல் பரிசுக் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசை சூ கி-க்கு வழங்கியது. சூ கியின் சார்பில் அவருடைய குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள்.

எந்த சமயத்திலும் எதற்காகவும் தான் நேசித்த மக்களையும் நாட்டையும் விட்டு வெளிவர சூ கி விரும்பவில்லை. காந்திய வழியிலான போராட்டத் தையும் கைவிட வில்லை.
சூ கி-யின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக... இந்திய அரசும் பெருமை மிகுந்த ஜவஹர்லால் நேரு விருதினை 1992-ல்  அளித்தது.அவரைராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைப்பதும் வெளியே விடுவதுமாக... பல முறை அவரது மன உறுதியைக் குலைக்க முயற்சித்தனர்.  அவரைப் பார்க்க எந்த பார்வையாளருக்கும் அனுமதி கிடையாது. தொலைபேசியில் பேச முடியாது. செய்திகளும் தெரிந்துகொள்ள முடியாது. ஒரு சமயம் சுனாமி பேரலையால் அவர் இருந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கிவிட்டது, மின்சாரமும் இல்லை. இப்படிப்பட்ட கடுமையான வீட்டுக் காவலில் இருந்தபடி அகிம்சை முறையில் போராடி வந்த அவரை, தற்போதுதான் மியன்மார் அரசு விடுதலை செய்திருக்கிறது. சூ கி, தனது மக்களையும் ஆதரவாளர் களையும் சந்தித்து, மக்களுக் கான தனது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார். அவர், சிறுவயதில் படித்த காந்திய சிந்தனைகளே அவரை உலகம் போற்றும் போராளி யாக இன்று நம் முன்நிறுத்தி இருக்கிறது. ஆகவே, நாம் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் நல் எண்ணங்களைச் செயல் படுத்து வதிலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.

Friday 24 June 2011

கார் பார்க்கிங்... காசு பார்க்கும் பில்டர்கள்!


இன்றைய நிலையில் பலரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்களோ, இல்லையோ ஒன்றுக்கு இரண்டாக கார் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வீடு வாங்கும்போது கார் பார்க்கிங் வசதி என்பது முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. இதைப் பயன்படுத்தி சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களை சேர்ந்த சில பில்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் பணம் பார்க்க ஆரம்பித்து விட்டதாக புகார்கள் எழ ஆரம்பித்திருக்கிறது.

என்ன பிரச்னை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். 

சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் இருக்கும் சுரேஷ்,  சொந்தமாக  ஒரு  ஃபிளாட் வாங்க அலைந்தார். அவருக்கு ஒரு கார், அவர் அப்பாவுக்கு ஒரு கார் என மொத்தம் இரண்டு கார்கள். இவற்றை நிறுத்த வசதியான அபார்ட்மென்ட் வேண்டும். 

அண்ணா நகரில் அப்படி ஒரு புது அபார்ட்மென்ட் கிடைத்தது. பில்டர், முதல் கார் பார்க்கிங்-க்கு 2 லட்ச ரூபாய் கேட்டார். இரண்டாவது கார் பார்க்கிங்க்கு 3 லட்சம் ரொக்கமா தரவேண்டும் என்றார். 

இதைகேட்டு அதிர்ந்து போனார் சுரேஷ். காரணம், கார் பார்க் கிங்குக்கு தனியாக பணம் வசூலிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் பணம் கேட்பது சரியா?

''கார் பார்க்கிங்-க்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்ட் இதற்கு காரணம்'' என்கிறார் 'பிரீமியர் ஹவுஸிங் அண்ட் இண்டஸ்ட்ரியல் என்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி. கார் பார்க்கிங் விஷயத்தில் எதை கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.



''திறந்தவெளி கார் பார்க்கிங் என்றால் நயா பைசா கொடுக்கத் தேவையில்லை. அது பொது பயன்பாட்டில் இருக்கும் இடமாக இருப்பதால் பணம் தரவேண்டாம். அதேநேரத்தில், சதுர அடி விலையைக் கணக்கிட எடுத்துக் கொள்ளும் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் இந்த கார் பார்க்கிங் பகுதி சேர்க்கப்படவில்லை என்றால், வீடு வாங்குபவர்கள் அதற்கு தனியாகப் பணம் கொடுத்து வாங்குவதில் தப்பில்லை. காரணம், மூடிய கார் பார்க்கிங்-ஐ கட்ட தனியாக ஒரு தளம் கட்ட வேண்டியிருக்கிறது. இப்படி தனியே கட்டப்படும் கார் பார்க்கிங்க்கு காசு வாங்கக்கூடாது என்றால் பில்டர்கள், இந்த கார் பார்க்கிங் கிற்கான விலையையும் சதுர அடியில் சேர்த்து விடுகிறார்கள்.
சூப்பர் பில்டப் ஏரியாவை எப்படி கணக்கிடுவது என்பதில் பில்டர்கள் ஆளுக்கொரு விதியை வைத்திருக்கிறார்கள். ஒரு தரப்பினர், சூப்பர் பில்டப் ஏரியாவில் கார் பார்க்கிங்கை சேர்த்து கணக்கிடுகிறார்கள். சிலர் அதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதை மாற்றி எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு முறையை கொண்டு வரவேண்டும். அது பொது மக்களுக்கு எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் கார் பார்க்கிங் கிற்கு தனியாகப் பணம் கொடுக்கக்கூடாது என்பது புரியும். இல்லை என்றால் ச.அடி. விலையோடு ஒரு முறையும், தனியாக ஒரு முறையும் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு காசு கொடுக்க வேண்டிவரும்'' என்றவர் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயத்தை சுட்டிக் காட்டினார்.

''சுரேஷ் விவகாரத்தில் நடந்ததைப்போல கார் பார்க்கிங்-க்கான விலையை தனியே ரொக்கப் பணமாக பில்டர் அல்லது புரமோட்டர்கள் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று அர்த்தம். ஒன்று, அந்த வருமானத்தை அவர்கள் கணக்கில் காட்டப் போவ தில்லை, அல்லது கார் பார்க்கிங்-க்கான கட்டடப் பகுதியை ஏற்கெனவே பொது பயன்பாட்டுப் பகுதியில் சேர்த்து வீட்டின் விலையில் ஏற்றிவிட்டார்கள் என்று அர்த்தம்'' என்றவர் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்பதையும் விளக்கினார். 

''வீட்டு வசதித் துறை, சி.எம்.டி.ஏ. சூப்பர் பில்டப் ஏரியாவில் எது எல்லாம் அடக்கம் என்பதை தெளிவாக்கும் விதமாக விதி முறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

கார் பார்க்கிங்குக்குத் தனியாக பணம் வாங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சொல்லி இருக்கும் நிலையில் இனியாவது அரசு இந்தப் பிரச்னையைக் கவனிக்குமா?

- சி.சரவணன்,நாணயம் விகடன்

Sunday 22 May 2011

தலையங்கம்:தயாராகிறது ஓர் எரிமலை...



First Published : 23 May 2011 04:26:05 AM IST

Last Updated : 23 May 2011 04:47:23 AM IST

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகத் தரத்திலான பொருள்கள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறது என்கிற திருப்தியும், சர்வதேச அளவில் நமது இந்திய நிறுவனங்கள் போட்டிபோடும் தகுதி பெற்றிருக்கின்றன என்கிற பெருமையும், நமது நகரங்கள் மேலைநாடுகளைப்போல நுகர்வோர் கலாசாரத்தை வரிந்து கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தமும் இனிக்கிறது. குறிப்பாக, தகவல் தொலைத்தொடர்புத் துறை நமது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சொர்க்கவாசலையே திறந்துவிட்டிருக்கிறது என்பதும் உண்மை.  ஆனால், இவையெல்லாம் மேம்போக்கான முன்னேற்றங்கள்தானே தவிர, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் சமச்சீர் முன்னேற்றம் கண்டு, எல்லா தரப்பினருக்கும் உலகமயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் போன்ற கொள்கைகளின் பயன்கள் சென்றடைந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் ஏற்பட்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகளைப் பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எந்தவொரு சமுதாயத்தையும் நாம் அந்தச் சமுதாயம் விரும்பும் மாற்றங்களிலிருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுதான் காரணம்.  சமீபத்தில் 2009-10-க்கான தொழிலாளர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாமைக்கான கணக்கெடுப்பின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களும், அறிக்கையும், இந்தியாவை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக இப்போதும் தொடர்வது வேலைவாய்ப்புதான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையால் சரக்குப் போக்குவரத்து சுலபமாகி, கணிசமாக நமது ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற கருத்தையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த அறிக்கை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது இறக்குமதி அதிகரித்து வருவதுடன், உற்பத்தி பல துறைகளில் குறைந்திருப்பதும், அதனால் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதும் இந்த அறிக்கையிலிருந்து தெரிய வந்திருக்கிறது. போதாக்குறைக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் எந்தவிதப் பயனும் அளிக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.  தொழில் துறை வளர்ச்சி பற்றி நாம் என்னதான் பேசினாலும், இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புக் களமாகத் தொடர்வது என்னவோ நமது கிராமப்புறங்கள்தான். கடந்த இருபதாண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தால் இந்த நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரமாக இருக்கிறது.  இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 23.80 கோடிக் குடும்பங்களில் 72.26% குடும்பங்கள் இப்போதும் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றன. இவர்களில் 10.1% பேர் வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் என்று தெரிவிக்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதனால்தான் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களை இந்த அளவுக்குக் கவர்கின்றன என்று கருத இடமிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்கான முக்கிய காரணி, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான்.  கிராமப்புறங்களில், விவசாயம்தான் 57% வேலைவாய்ப்பு வழங்குகிறது. கட்டுமானத் தொழில் 7.2%, சிறு தொழில் உற்பத்தி 6.7%, ஏனைய சில்லறை வியாபாரங்கள், கைவினைப் பொருள்கள், சேவைத்துறை போன்றவை 6.3% வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விவசாயம் செழிப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறாமல் போனால் ஒட்டுமொத்த கிராமப்புற வேலைவாய்ப்புகளும் சுருங்கி விடுகின்றன. விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவை ஈடுகட்ட கிராமப்புற மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தரப்படுவதில்லை.  கிராமப்புறத் தொழிலாளிகளுக்கு மாற்றுத் தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலமும், விவசாயம் பொய்த்தாலும் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வழிகோலுவதன் மூலமும்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவில், விவசாயத் தேக்கத்தை ஈடுகட்டி வந்த கால்நடை வளர்ப்பு இப்போது இல்லாமல் போனதுகூட, கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை.  நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆரோக்கியமான வகையில் வளர்க்க உதவாமல், ஊழலுக்கும், ஆக்கபூர்வமான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்திருக்கிறது என்கிற உண்மையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகிறது. விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், கிராமப்புறத் தொழிலாளர்களிடம் சேவைத் துறைக்கான திறமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.  சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தும், பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் இன்றும் இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதிலிருந்தே, திறமைகள் வளர்க்கப்பட்டு, தன்னம்பிக்கையுடன் போட்டிபோடத் தயாரான தலைமுறை உருவாக்கப்படவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயமும் ஆதரிக்கப்படாமல், கிராமப்புற வளர்ச்சியும் போதிய கவனத்தைப் பெறாமல், தொழில் வளர்ச்சி என்பதும் நகர்ப்புற வளர்ச்சியாக இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து, சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக்கூடும் என்பதைத்தான் உணர்த்துகிறது.  சமூகப் பாதுகாப்பு என்பது தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதால் இந்தப் பிரச்னை மேலும் கடுமையாகி மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்றுமதி, இறக்குமதி, பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது ஆட்சியாளர்களின் முழுமுதல் கவனமும் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முனைப்புடன் செலுத்தப்படாவிட்டால், ஓர் எரிமலை வெடிக்கத் தயாராகிறது...!

மைக்கேல் ஜாக்ஸன் : மீள முடியாத இசைக் கனவு - சாருநிவேதிதா

உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் சென்ற மாதம்தான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விடுவார் என்ற கொடுங்கனவு ஒன்றைக் கண்டு அவருடைய த்ரில்லர், பேட் , டேஞ்ஜரஸ், ஹிஸ்டரி போன்ற ஆல்பங்களைக் கேட்டேன். விரைவில் மைக்கேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் The Jacksons: An American Dream என்ற படத்தையும் பார்த்து விட்டு அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.

மைக்கேலின் மரணம் பற்றி எனக்கு உள்ளுணர்வாகத் தோன்றிய கொடுங்கனவுக்கு, அவர் எடுத்துக் கொள்ளும் பலவிதமான வலி நிவாரணி மாத்திரைகள் குறித்த என் கவலையும் பதற்றமும் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

கலை, இலக்கியத் துறைகளில் பூகோள எல்லைகளையும், பத்தாம்பசலித் தனமான மதிப்பீடுகளையும் தாண்டிய தேடல் கொண்ட என் போன்றவர்களுக்கு 1982-இல் வெளிவந்த அவருடைய ’ த்ரில்லர் ’ என்ற ஆல்பம் மிகப் பெரிய கலை அனுபவத்தைத் தருவதாக இருந்தது. பின்னர், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் தொண்ணூறுகள் வரை மைக்கேல் ஜாக்ஸன் அளவுக்கு எங்களின் வாழ்க்கையில் அவ்வளவு அந்தரங்கமாக ஊடுருவிய ஒரு கலைஞன் இருந்திருக்க முடியாது என்றே சொல்லலாம்.

வாழ்க்கையைக் குறித்த ஒரு ஜென் கதையை நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருப்போம். அடர்ந்த கானகத்தில் கொடும் விலங்கினால் துரத்தப்பட்டு ஓடிவரும் ஒருவன் பாழும் கிணற்றில் தடுமாறி விழுந்து, ஒரு விழுதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். அப்போது அந்த மரத்திலிருந்து ஒரு பாம்பு அவனை நோக்கி நகர்ந்து வருகிறது. இவன் விழுந்ததால் கலைந்து போன தேன் கூட்டிலிருந்து தேன் சொட்ட, அந்தத் தேனை சுவைத்து நக்கினான் அவன் என்பது அந்தக் கதை.

அந்தக் கதையில் வரும் அதே போன்ற அபாயகரமான சூழலில்தான் இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மதவாதிகளும், அரசியல்வாதிகளும், தேச பக்தர்களும், தேசத் துரோகிகளும், ஆயுத உற்பத்தியாளர்களும் இந்த உலகை ரத்தக் களரியாக்க்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் வாழ்வு குறித்த நம்பிக்கையையும், கனவையும் அளித்ததாலேயே உலகம் பூராவும் கோடிக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும் மைக்கேலை ஒரு தீர்க்கதரிசியைப் போல் கொண்டாடுகிறார்கள். அந்தக் காரணத்தினால்தான் அவருடைய ஆல்பங்களின் விற்பனை 75 கோடியைத் தாண்டின; 13 கிராமி அவார்டுகள் கொடுக்கப்பட்டன.

இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு இந்த உலகில் அதிக அளவு பிரபலமானவராக அறியப்பட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். தேசம், மொழி, மதம் என்ற வரையறைகளையெல்லாம் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் அவருக்கு மிகத் தீவிரமான ரசிகர் கூட்டம் இருந்தது. தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் கூட ஒரு சிறுவன் நன்றாக நடனம் ஆடினால் ‘குட்டி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்று அழைக்கப் படும் அளவுக்கு அவரது புகழ் பரவியிருந்தது. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு ஜான் லெனனையோ, பாப் மார்லேயையோ தெரியுமா? உலகில் உள்ள நூற்றுக் கணக்கான பாடகர்களையும், நடனக்காரர்களையும் மீறி மைக்கேல் ஜாக்ஸன் என்ற ஒரே ஒருவர் மட்டும் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்குக் காரணம் என்ன?

மைக்கேலின் குரலிலும் நடனத்திலும் இருந்த மேஜிக்தான் காரணம். ’ பில்லி ஜீன் ’ என்ற பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தில் யாராலும் நம்பவே முடியாத ‘மூன்வாக் ’ கை நடந்து காண்பித்தார். 1983-இல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் இந்த நிலவு நடையை நடந்து காண்பித்ததை உலகம் பூராவும் 5 கோடி பேர் பார்த்தார்கள். நிலவில் நடப்பதைப் போன்ற இந்த நடையை இவருக்கு முன்பே ஓரிரண்டு ஆட்டக்காரர்கள் ஆடியிருந்த போதிலும் மைக்கேல் ஆடிய போதுதான் இது உலக அளவில் பிரபலமாகியது. முன்னோக்கி நடக்கும் ஆட்டக்காரர் ஏதோ ஒரு விசையால் பின்னோக்கி இழுக்கப் படுவதைப் போல் தோற்றம் தரக் கூடியதாக ஒரு கால் பின்னோக்கி நகரும் இந்த நிலவு நடையை மைக்கேல் மேடையில் நிகழ்த்திக் காண்பிக்கும் போது இதைப் பார்க்கும் அத்தனை பேருமே ஒரு பித்தநிலைக்குப் போவதைக் காணலாம். அதோடு இந்தப் பாடலில் அவர் அவ்வப்போது கொடுக்கும் விக்கல் ஒலியும் பிரசித்தமானது.

’ The Way You Make Me Feel’ என்ற பாடல் இளைஞர்களுக்கானது. அது ஒரு காதல் பாடல். காதலிக்கும் போது நீ நீயாக இரு என்பது செய்தி. அந்தப் பாடலிலும் காண்பவர்களை வசியம் செய்யும் விதத்தில் முன்னங்கால்களைத் தேய்த்துத் தேய்த்து நடப்பார் மைக்கேல்.

மைக்கேல் தன்னுடைய எல்லாப் பாடல்களிலுமே ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அல்லது, உலக சமாதானம் குறித்த தனது அரசியல் கருத்துக்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்தார். கதைகளில் மாயாஜாலக் கதை, சாகசக் கதை, பேய்க் கதை (த்ரில்லர்), சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதை (ஸ்மூத் க்ரிமினல்), கார்ட்டூன் பொம்மைக் கதை ( Speed Demon) என்று பலவிதமான கதைகளைப் புனைந்தார். அவர் சொன்ன கதைகளும் உலக அளவில் சிறுவர்களை ஈர்த்ததற்கு மற்றொரு காரணம். ’Remember the Time’ என்று ஒரு பாடல். எகிப்திய மன்னன் ராம்ஸேஸ் (நடிப்பு: எட்டி மர்ஃபி) மது அருந்திக் கொண்டிருக்கிறான். அரசிக்கு ஒரே அலுப்பாக இருக்கிறது. “என் ஃபேரோ தன்னுடைய அரசிக்காக கேளிக்கை காண்பிப்பானா?“ என்று கேட்கிறாள். குச்சிகளை வைத்து வித்தை காட்டும் ஒருவன் வந்து தன் திறமையைக் காட்டுகிறான். அரண்மனையின் பணிப்பெண்கள்தான் அதை ரசிக்கிறார்கள். அரசிக்கு எரிச்சல் வருகிறது. ” இதெல்லாம் ஒரு கேளிக்கையா? இவனை சிங்கத்துக்கு இரையாக்குங்கள் ” என்கிறாள். அடுத்து வருபவன் தீயை விழுங்குபவன். அவன் சிரச்சேதம் செய்யப் படுகிறான்.

அடுத்து, முகத்திலிருந்து கால் வரை முக்காடு இட்ட ஒரு உருவம் வருகிறது. அது தரையில் ஒரு பொடியைத் தூவி விட்டு அதன் மேல் நிற்கிறது. உடனே அந்த உருவம் மறைந்து அந்த முக்காடு மட்டுமே தரையில் விழுகிறது. அரசி முதல் முதலாக ஆச்சரியம் கொள்கிறாள். பிறகு அந்த இடத்திலிருந்து ஜொலிக்கும் ஆணழகன் ஒருவன் முளைக்கிறான். அவளை வசீகரிக்கும் ஆட்டத்துடன் ஒரு பாடலைப் பாடுகிறான். அந்தப் பாடல் அவளைக் கால எந்திரத்தில் 3500 ஆண்டுகள் முன்னோக்கி இழுத்துச் செல்கிறது. “நாம் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தோம்; அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? கைகளைக் கோர்த்தபடி கடற்கரைகளில் உலா வந்தோம். இரவும் பகலும் தொலைபேசியில் பேசினோம். எல்லாம் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததே, ஏன்? உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா பெண்ணே?”

இதைக் கேட்டுக் கடுங்கோபம் அடையும் ஃபேரோ அவனைக் கொல்லும்படி ஆணையிட, சேவகர்களால் அந்த ஆட்டக்காரனைப் பிடிக்கவே முடியவில்லை. அவன் ஒரு மந்திரவாதி. பிடித்தால் காற்றாய்க் கரைந்து வேறோர் இடத்துக்குப் போய் அங்கிருந்து ஆடுகிறான்; அரசியிடம் தனது பழைய காதல் கதைகளைப் பாடி அவளை மயக்குகிறான். கடைசியில் ஃபேரோவும் அவனுடைய சேவகர்களும் அவனை நான்கு பக்கமும் சூழ்ந்து கொள்ளும் போது அவன் திரும்பவும் பழையபடியே மந்திரத் தூளாக மாறி காற்றில் கலந்து விடுகிறான்.

மைக்கேலின் வாழ்க்கையைப் பற்றிய ’ ஜாக்ஸன்ஸ்: ஓர் அமெரிக்கக் கனவு ’ என்ற ஐந்து மணி நேரப் படம் 1992-இல் ஒளிபரப்பப் பட்டது. அவரது தாய் கேதரீனின் ’ என் குடும்பம் ’ என்ற சுய சரிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் மைக்கேலின் இளமைக் காலத்தையும், அவர் ஒரு இசைக் கலைஞராக உருவானதன் பின்னணியையும் புரிந்து கொள்ளப் பெருமளவுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது இத்திரைப்படம்.

மைக்கேலின் தந்தை மிகக் கொடூரமானவராக இருந்ததாகவும், அவர் மைக்கேலை பலவிதமாகத் துன்புறுத்தியதுதான் அவரது பிற்கால வாழ்வை வெகுவாக பாதித்ததாகவும் பல பத்திரிகையாளர்கள் எழுதி வருவதுண்டு. ஆனால், 1950களில் அமெரிக்காவில் ஒரு காதல் ஜோடி முத்தம் கொடுத்துக் கொள்வது கூட வரம்பு மீறிய செயலாகக் கருதப் பட்டது. அப்படிப்பட்ட கால கட்டத்தில், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு கடைநிலைத் தொழிலாளி தன் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வார்? அது மட்டும் அல்லாமல், மைக்கேலின் தந்தை ஜோசஃப் ஒரு தோற்றுப் போன இசைக் கலைஞன். அதனாலேயே தன்னுடைய புதல்வர்கள் பெரும் இசைக் கலைஞர்களாக வர வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். அந்தச் சிறுவர்கள் அவரைப் போலவே இசையில் அதீதமான திறமையைக் கொண்டிருந்ததும் அப்படி அவர் கடுமையான பயிற்சி அளித்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

உதாரணமாக, மைக்கேலின் மூத்த சகோதரர்கள் நால்வரும் நடனம், பாடல் மற்றும் இசைக் கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது மைக்கேலை தந்தை ஜோசஃப் தங்கள் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘நீ சிறுவன் ’ என்று சொல்லி மறுத்து விடுகிறார். அப்போது மைக்கேலின் வயது நான்கு. பிறகு ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் முதல் பரிசு வாங்கியதும்தான் அவனையும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். அதுவும் பாடகனாக அல்ல; ட்ரம்ஸ் வாசிப்பவனாக. பிறகு ஏழு வயதில்தான் மேடையில் ’ ஜாக்ஸன் 5 ’ குழுவில் பாட ஆரம்பித்தார் மைக்கேல்.

கேத்ரீனின் புத்தகத்தையும், அதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மைக்கேலின் சரிதம் பற்றிய இந்தப் படத்தையும் பார்த்தால் மைக்கேலின் தந்தை அந்தக் கால கட்டத்தில் இருந்த ஒரு வழக்கமான தந்தையாகத்தான் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், மைக்கேல் மற்றும் அவருடைய மூத்த சகோதரர்களின் இசைப் பயிற்சிக்காகவும், அவர்களது திறமை வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் மைக்கேலின் தந்தை ஜோசஃப் தன்னுடைய சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்.

ஏழு பிள்ளைகளும் மனைவியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேருக்கு ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வாழ்ந்தபடி தன் பிள்ளைகளின் இசைப் பயிற்சிக்காகவும், பிறகு அவர்களைக் கொண்டு தான் அமைத்த ’ ஜாக்ஸன் 5 ’ இசைக் குழுவுக்காகவும் ஒருமுறை பெரும் அளவிலான இசைச் சாதனங்களை வாங்கி வருகிறார் ஜோசஃப்.

” நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டு சண்டை பிடிக்கும் கேதரீனின் ஆட்சேபணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, தன் குழந்தைகளின் இசைக் குழு நாடெங்கும் பிரபலமாக வேண்டும். அவருடைய இந்தக் கனவு ‘ஜாக்ஸன் 5 ’ இசைக் குழு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நிறைவேறி விடுகிறது. தாங்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் பரிசுகளைக் குவிக்கிறார்கள் ஜோஸஃபின் குழந்தைகள். ஒன்பது வயதிலேயே மைக்கேலுக்கு ஒரு பிரபல பாடகனுக்குக்கு உரிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. மைக்கேல் மேடையில் பாடும் போது இப்போது பார்வையாளர்களிடம் நாம் கண்ட அதே பித்துப் பிடித்த எதிர்வினையையே அப்போதும் பார்க்க முடிகிறது. இதற்கு மைக்கேலின் திறமை தவிர, ஜோஸஃபின் இடைவிடாத உழைப்பும், தன் குழந்தைகள் மீது அவர் வைத்த தீவிர நம்பிக்கையும்தான் காரணம். இதற்காக ஜோஸஃப் தன் மகன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நடனத்தில் ஒரு அடி பிசகினாலும் பெல்ட்டால் அடித்தார். இதைத்தான் இப்போது பல விமர்சகர்கள் மிகவும் அசாதாரணமான விஷயமாகக் கருதி எழுதுகின்றனர். இதெல்லாம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கிராமப் புறங்களில் இன்றைக்கும் காணக் கூடிய அன்றாட நிகழ்வுகளாய் இருப்பது இந்த மேற்கத்திய விமர்சகர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய விமர்சகர்களும் இதே பல்லவியைப் பாடலாமா என்பது ஒரு கேள்வி.

இசையிலும் நடனத்திலும் தான் கொடுக்கும் கடும் பயிற்சிகளுக்காக ஜோஸஃப் தன் மகன்களை மற்ற பையன்களைப் போல் விளையாட அனுமதிக்கவில்லை. ஓய்வெடுக்க விடவில்லை. இரவும் பகலும் எந்நேரமும் பயிற்சியிலேயே அவர்களை ஈடுபட வைத்தார். அதனால்தான் அப்போது உலக அளவில் முன்னணிப் பாடகியாக இருந்த டயானா ராஸ் ஒன்பதே வயதான மைக்கேலுடன் மேடையில் ஒன்றாகப் பாடினார். மைக்கேலின் வாழ்க்கையில் நடந்த அந்த மிக முக்கியமான சம்பவம் உலகின் பிரசித்தி பெற்ற இசை அரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில் (நியூயார்க்) நடந்தது. ’ ஜாக்ஸன் 5 ’ குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டவரும் டயானா ராஸ் தான்.

ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக மைக்கேல் இழந்தது மிகவும் அதிகம். “இரவு இரண்டு மணிக்கு என் அப்பா எங்களை எழுப்புவார். மூன்று மணிக்கு ஏதாவது ஒரு க்ளப்பில் இசை நிகழ்ச்சி இருக்கும். இப்படி எல்லா அமெரிக்க நகரங்களிலும் பாடி இருக்கிறேன். அப்போது என் வயது ஏழு இருக்கும் ” என்கிறார் மைக்கேல்.

அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மைக்கேலின் வாழ்வில் அவருடைய அம்மாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்டார் டயானா ராஸ். தன் அம்மாவுக்குப் பிறகு தன் குழந்தைகளை வளர்க்கும் உரிமை டயானா ராஸுக்கு மட்டுமே உண்டு என்று உயில் எழுதி வைத்துள்ளார் மைக்கேல். அதே சமயம், தன் அம்மாவுக்கு முன்பு தான் இறக்க நேர்ந்தாலும் தன் குழந்தைகளை வளர்க்கும் உரிமை டயானாவுக்கு மட்டுமே உண்டு என்று உயிலில் குறிப்பிடுகிறார் மைக்கேல். அந்த உரிமையை அவர் தன் அம்மா கேதரீனுக்குக் கூடக் கொடுக்கவில்லை. டயானாவும் மைக்கேலைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘மை பேபி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்றே சொல்வது வழக்கம்.

’ ஜாக்ஸன் 5 ’ குழுவின் முதல் ஆல்பத்தை டயானா ராஸ் வெளியிட்ட பிறகு டயானா ராஸும் மைக்கேலும் தொடர்ந்து பல மேடைகளில் ஒன்றாகப் பாடினார்கள். உலகின் முன்னணிப் பாடகி ஒருவர் பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவனைத் தன்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாட அழைத்தார் என்றால் மைக்கேலின் திறமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

மைக்கேலின் வாழ்வைப் புரிந்து கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அதிகம். அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று Paul Theroux தற்போது மைக்கேல் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இன்னும் தலைப்பிடப்படாத புத்தகம். அதில் அவர் ஒருநாள் அதிகாலை நான்கு மணி அளவில் மைக்கேல் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியது பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.

பால் தெரோ ஒரு புகழ்பெற்ற பயண எழுத்தாளர், நாவலாசிரியர். உலகின் பல நாடுகளை ரயிலிலேயே சென்று புத்தகங்கள் எழுதுபவர். ஒருமுறை உலகம் முழுவதுமே ரயிலில் சென்று ’ தெ க்ரேட் ரயில்வே பஸார் ’ என்ற சுவாரசியமான புத்தகத்தை எழுதியிருக்கிறார்.



முதலில் இவர் மைக்கேலை அவரது நெவர்லேண்ட் வீட்டில் சந்தித்தது பற்றிக் கூறுகிறார். நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு கனவு உலகம். மாயாஜாலக் கதைகளில் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு அற்புத உலகம். மலைப்பாம்பு, நாகப் பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை ( இது எலிஸபெத் டெய்லர் மைக்கேலுக்குப் பரிசாகக் கொடுத்தது), உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி ( எலிஸபெத் டெய்லரை முதல்முதலாகப் பார்க்கச் சென்றபோது கூட மைக்கேல் இந்த சிம்பன்ஸியோடுதான் சென்றார்), சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான மிருகங்களும், ராட்சசக் குடை ராட்டினங்கள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில் போன்று ஒரு சிறுவர் கண்காட்சியில் காணக் கூடிய எல்லா விஷயங்களும் இங்கே இருந்தன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு ரயில் வசதியும், ஒரு ரயில்வே நிலையமும் கூட (கேதரீன் ரயில்வே ஸ்டேஷன்) இங்கே அமைக்கப் பட்டிருந்தன.

இது தவிர, அங்கே நான்கு பேரின் புகைப்படங்கள் மாட்டப் பட்டிருந்தன. எலிஸபெத் டெய்லர், டயானா ராஸ், மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின். அந்த நெவர்லேண்ட் கனவுலகத்தில் இருந்த இன்னொரு படம், பீட்டர். J.M. Barrie எழுதிய ’ பீட்டரும் வெண்டியும் ’ என்ற சிறுவர் சாகசக் கதையில் வரும் பீட்டர் என்ற கதாபாத்திரத்தைத்தான் மைக்கேல் தனது ஆதர்ஸமாகக் கொண்டிருந்தார். பீட்டர் தன்னுடைய உயிர்த் தோழியான வெண்டியை அழைத்துக் கொண்டு நெவர்லேண்ட் என்ற கனவுலகத்துக்குப் பறந்து சென்று ஏதேதோ சாகசங்களைச் செய்கிறான். பீட்டரின் விசேஷம் என்னவென்றால், அவன் பெரிய ஆளாக வளராமல் எப்போதும் சிறுவனாகவே இருப்பான்.

இதே மனநிலையைத்தான் மைக்கேலும் கொண்டிருந்தார். ஒரு 12 வயதுச் சிறுவனின் மனநிலையை மைக்கேல் தன் வாழ்நாளில் தாண்டியதில்லை என்றே சொல்லலாம். அவருடைய ‘குழந்தைப் பருவம் ’ என்ற பாடலைப் பாருங்கள்:

Have you seen my Childhood?
I'm searching for the world that I come from
'Cause I've been looking around
In the lost and found of my heart...
No one understands me
They view it as such strange eccentricities...
'Cause I keep kidding around
Like a child, but pardon me...

People say I'm not okay
'Cause I love such elementary things...
It's been my fate to compensate,
for the ChildhoodI've never known...

Have you seen my Childhood?
I'm searching for that wonder in my youth
Like pirates and adventurous dreams,
Of conquest and kings on the throne...

Before you judge me, try hard to love me,
Look within your heart then ask,
Have you seen my Childhood?

1993- இல் மைக்கேலுக்கு 13-ஆவது முறையாக க்ராமி பரிசு வழங்கப்பட்ட போது அவருடைய ஏற்புரை:

கடந்த மாதம் இருந்த ‘எங்கே? ’ என்று நிலையிலிருந்து இப்போது ‘இங்கே ’ என்று நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒரு ஆளுமை என்று சொல்வதை விட ஒரு ஆள் என்று சொன்னால்தான் எனக்குப் பிடிக்கும். ஏனென்றால், என்னைப் பற்றி எழுதப் படும் எல்லாவற்றையும் நான் படிப்பதில்லை. என்னை ஒரு வினோதமான ( weird and bizarre) பிறவி என்று உலகம் நினைப்பது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் என்னைப் போல் ஐந்து வயதிலிருந்து பத்து கோடி மக்களின் பார்வைக்கு முன்னால் வளரும் யாருமே வித்தியாசமான ஒருவராகவே இருப்பார். அதுதான் இயல்பு. கடந்த சில வாரங்களாக நான் என்னை சுத்திகரித்துக் கொள்ளும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இது எனக்கு ஒரு மறுபிறவி மாதிரியே தோன்றுகிறது.

என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்துமஸ் கிடையாது; பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கிடையாது; அது ஒரு முறையான குழந்தைப் பருவமாக இல்லை. ஒரு குழந்தைக்குக் கிடைத்திருக்க வேண்டிய எந்த சந்தோஷமும் எனக்குக் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக மிகக் கடுமையான பயிற்சி, போராட்டம், வலி பின்னர் அதன் விளைவான லௌகீக லாபமும், தொழில்ரீதியான வெற்றியும் கிட்டியது. ஆனால் அதற்காக நான் கொடுத்த பயங்கரமான விலை – அதை எதனாலும் எனக்குத் திருப்பிக் கொடுக்க முடியாது. என் வாழ்வின் அந்தப் பகுதியை என்னால் என்ன செய்தாலும் திரும்ப வாழ முடியாது. இருந்தாலும், இன்று, என்னுடைய இசையை சிருஷ்டிக்கும் போது, நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம்முடைய இதயங்களைத் திறந்து காட்டும் போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை எண்ணும் போது நான் பரவசமடைகிறேன். சம்மதத்தின் சப்தம் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாகவும், எல்லா உலகங்களின் ஊடாகவும் பொங்கிப் பிரவகித்து மாயாஜால நதியாய் ஓடுகிறது. அந்த அற்புதம் நமது இதயங்களை நிரப்புகிறது . வாழ்வின் கொண்டாட்டமும் குதூகலமும் ஒரு அற்புதமாக மின்னல்வெட்டைப் போல் ஒருக்கணம் நம் இதயங்களை நிரப்பும்.

அதன் காரணமாகவே நான் குழந்தைகளை நேசிக்கிறேன்; அவர்களோடு இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த உலகின் பல பிரச்சினைகள் – அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தில் நடக்கும் சிறு குற்றமாக இருந்தாலும் சரி, அல்லது, மிகப் பெரிய போர், பயங்கரவாதம், அளவுக்கதிமான கைதிகளால் நிரப்பப்படும் சிறைச்சாலைகள் என்று ஆனாலும் சரி – இது எல்லாவற்றுக்குமே காரணம் சிறார்களிடமிருந்து அவர்களின் குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டதுதான்.

அந்த மேஜிக், அந்த அற்புதம், ஒரு குழந்தையின் வெகுளித்தன்மை – இதுதான் சிருஷ்டிகரத் தன்மையின் விதைகள். அதுதான் இந்த உலகை சொஸ்தப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

குழந்தைகளிடமிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்? சிறுபிள்ளைத் தனத்தையா? இல்லை... அவர்களோடு இருந்தால் அது நம்மை இந்த வாழ்வில் எங்கும் நிறைந்திருக்கும் மிக உன்னதமான, மிக ஆழமான நீதியையும் அறத்தையும் நோக்கி இட்டுச் செல்லும். அந்த அறமும், நீதியும் அவற்றை வாழ்ந்து பார்க்கச் சொல்லி நம்மை அழைக்கிறது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வு நம்முடைய இதயத்திலே புதைந்து கிடக்கிறது; அதைக் குழந்தைகள்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள். நோயால் பீடிக்கப்பட்டும், வாழ்க்கையின் அனுகூலங்கள் கிடைக்கப் பெறாமலும் இருக்கும் குழந்தைகள் உட்பட இந்த உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இன்றைய தினம் நான் நன்றி கூறுகிறேன்... உங்களுடைய வலியும் வேதனையும் என்னை வெகுவாக பாதிக்கிறது.

***

குழந்தைப் பருவத்தை இழந்த ஒரு குழந்தையைப் போன்ற மைக்கேலின் இந்த மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத சமூகம் தனது வக்கிரத்தையெல்லாம் அவர் மீது செலுத்தியது. சிறுவர்களோடு ஒரே கட்டிலில் படுத்திருந்தார் என்பதில் தொடங்கி, சிறுவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கினார் என்பது வரை அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1983-இல் 13 வயது சிறுவன் ஒருவன் மைக்கேல் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்தான். இதன் காரணமாக போலீஸ் மைக்கேலை நிர்வாணமாக்கி சிறுவன் சொன்ன அடையாளங்கள் அவரது ஆணுறுப்பில் உள்ளதா என்று சோதித்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரை இப்படி நிர்வாணப்படுத்தி சோதித்தது போலீஸ். ஆனால் கடைசியில் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மைக்கேலை வெகுவாக பாதித்ததால் அந்த மன உளைச்சலிலிருந்து வெளியே வர அவர் போதை மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார்.

ஆனால் மைக்கேல் எப்படிப்பட்டவர் என்பதை பின்வரும் சம்பவத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். மைக்கேலின் குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் முதல்முறையாக நெவர்லேண்ட் செல்கிறார். வெளிவாசலிலிருந்து உள்ளே செல்லும் ரயிலில் ஏறி மைக்கேலின் வீட்டுக்குச் செல்கிறார். மூன்று அறைகளைக் கொண்ட சிறிய வீடு அது. வெளியிலிருந்து குரல் கொடுக்கிறார் நண்பர். “யார் நீங்கள்? ” என்ற குரல் உள்ளிருந்து வருகிறது. அது மைக்கேலின் குரல். நண்பர் தன் பெயரைச் சொல்கிறார். ஆனால் “யார் நீங்கள்? ” என்ற குரலே மீண்டும் கேட்கிறது. மைக்கேலின் நண்பர் மீண்டும் தன் பெயரைச் சொல்கிறார். ஆனால் அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் மீண்டும் “யார் நீங்கள்? ” என்ற குரல் கேட்டதும் நண்பருக்கு ஒரே குழப்பம். பதில் சொல்லாமல் திகைத்தபடி நிற்கும் போது மைக்கேல் சிரித்துக் கொண்டே வந்து கதவைத் திறக்கிறார். அப்போது அவர் அறையிலிருந்த பெரிய கிளி ஒன்று மைக்கேலின் குரலில் அந்த நண்பரைப் பார்த்து “யார் நீங்கள்? ” என்று கேட்கிறது. இதிலுள்ள குழந்தைத் தன்மையும், கவித்துவமும் போலீஸ்காரர்களுக்கும், மைக்கேலிடமிருந்து தங்கள் குழந்தைகளை வைத்துப் பணம் பறிக்க நினைக்கும் பேராசை பிடித்த ஒருசில பெற்றோருக்கும் புரியுமா என்ன?

ஆனால் மைக்கேலின் பாடல் வரிகளைத் தெரிந்தவர்களுக்கு அவருடைய குழந்தைப் பாசமும், மிருக நேயமும் ஆச்சரியமாக இருக்காது. அவர் சிறுவனாக இருந்தபோதே எலி வளர்த்திருக்கிறார். மேலும், அவர் ஒரு சைவ உணவுக்காரர். இது வெறும் உணவுப் பழக்கத்தால் அல்ல; உயிர்க் கொலை கூடாது என்ற அவருடைய ஜீவகாருண்ய நம்பிக்கையின் காரணமாக அவர் பின்பற்றிய வழக்கம் இது. இந்த உலகத்தில் அவர் மிக அதிகமாக நேசித்தது குழந்தைகளையும், மிருகங்களையும்தான். இதை அவருடைய பல பாடல்களில் காணலாம் என்றாலும் குறிப்பாக ‘Earth Song’ – ஐ ஒரு உதாரணமாகக் கூறலாம். இந்தப் பாடலின் பின்வரும் பகுதியைக் கவனியுங்கள்:

Did you ever stop to notice
All the children dead from war
Did you ever stop to notice
The crying Earth the weeping shores…

What about animals
We've turned kingdoms to dust
What about elephants
Have we lost their trust
What about crying whales
We're ravaging the seas
What about forest trails
Burnt despite our pleas

அவருடைய ‘ Heal the World’ என்ற பாடலில் திமிங்கிலங்களை நாம் அழித்துக் கொண்டிருப்பது பற்றிய காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.

மைக்கேலின் வாழ்வில் டயானா ராஸை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஒருவர் எலிஸபெத் டெய்லர். “எங்களிடையே மேஜிக் போன்றதொரு உறவு இருந்தது ” என்கிறார் எலிஸபெத். மைக்கேலையும் தன்னையும் அவர் பீட்டர்/வெண்டி என்றும் சொல்லிக் கொள்வதுண்டு. மைக்கேலின் வாழ்வைத் தனிமை சூழ்ந்திருந்தது என்று சில விமர்சகர்கள் சொல்வதுண்டு. ஆனால் மைக்கேலுக்கும் எலிஸபெத்துக்கும் இருந்த உறவை வைத்துப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. “மைக்கேல் என்னுடைய உடலின் ஒரு பகுதி. நாங்கள் இருவருமே ஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்வோம் ” என்கிறார் எலிஸபெத்.

எலிஸபெத்துக்கும் தனக்கும் உள்ள உறவு பற்றி மைக்கேல் இவ்வாறு கூறுகிறார்:

” என்னுடைய துறையில் நீங்கள் யாரையுமே நம்ப முடியாது. யார் உங்களுடைய உண்மையான நண்பர் என்று கண்டு பிடிக்க முடியாது. நீங்கள் பிரபலமானவராக இருப்பதால் உங்களைச் சுற்றி எப்போதுமே ஆட்கள் இருந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் நீங்கள் தனிமைப்பட்டே இருப்பீர்கள். பிரபலமான மனிதர் என்றால் நீங்கள் ஒரு சிறைக்கைதி என்று பொருள். சாதாரணமாக மற்றவர்களைப் போல் நீங்கள் வெளியே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை எல்லோரும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன படிக்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள்... எல்லாமே அவர்களுக்குத் தெரிய வேண்டும். எப்போதுமே உங்களுக்குப் பின்னே ஒரு பத்திரிகையாளர் கூட்டம் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். அவர்கள் என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் ஊடுருவுகிறார்கள். அவர்கள் எதார்த்தத்தைத் திரித்து எழுதுகிறார்கள். அவர்கள்தான் என் வாழ்வின் கொடுங்கனவு. இப்படிப்பட்ட சூழலில் நான் எலிஸபெத்தை மட்டுமே நம்புகிறேன்.

அவர் எனக்கு அம்மா மாதிரி. ம்ஹும். தோழி. இல்லை; அதை விட அதிகம். அவர் என்னுடைய மதர் தெரஸா; என்னுடைய இளவரசி டயானா, என்னுடைய வெண்டி... அவர் என் அருகில் இருப்பதே ஒரு அற்புதம் போல் தோன்றுகிறது. அவர் பக்கத்தில் மட்டுமே நான் பாதுகாப்பாக உணர்கிறேன்; ஏனென்றால் எங்கள் இருவரின் இளமைக் காலமும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது. அதாவது, குழந்தை நட்சத்திரங்களாக வாழ்வதன் சோகம் நிரம்பிய வாழ்க்கை எங்களுடையது. எங்கள் இருவரின் அனுபவங்களும் ஒரே மாதிரியானவை ” என்கிறார் மைக்கேல்.

தன்னுடைய ‘பிராபல்யம் ’ பற்றி மைக்கேல் மேலும் கூறுகிறார்: “அது உங்களை மிக வினோதமான விஷயங்களைச் செய்ய வைக்கிறது. புகழ் ஒரு போதை. இந்தப் போதையால் பலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதை சமாளிக்கத் தெரியவில்லை. ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களுடைய சுரப்பி பிரபஞ்ச விளிம்புக்குச் சென்று விடும். அந்தக் கைத்தட்டல் ஓசை உங்களை நிலத்திலிருந்து மேலே தூக்கி மிதக்க வைக்கும். உங்களால் தூங்க முடியாது. இரவு இரண்டு மணி ஆகி விடும். ஆனாலும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருப்பீர்கள். நான் இதை வாசிப்பின் மூலம் கடக்க முயல்வேன். ஸாமர்ஸெட் மாம், மார்க் ட்வெய்ன், வால்ட் விட்மன், ஹெமிங்வே இவர்களெல்லாம் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள். இல்லாவிட்டால் விடியோ கேம்ஸ் ஆடுவேன். ”

***

மைக்கேல் பற்றிய மற்றொரு முக்கியமான ஆவணப் படம் Living With Michael Jackson. பிரிட்டிஷ் பத்திரிகையாளரான மார்ட்டின் பஷீர் மைக்கேல் ஜாக்ஸனை மே 2002 இலிருந்து ஜனவரி 2003 வரை எட்டு மாத இடைவெளியில் பேட்டி கண்டு எடுத்த படம் இது.

துரதிர்ஷ்டவசமாக அந்த ஆவணப் படத்தை எடுத்த பஷீர், அவருக்கு விருப்பமான விதத்தில் வெட்டி, ஒட்டி மைக்கேலைப் பற்றி மிகத் தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கும் விதமாக வெளியிட்டு விட்டார். பஷீருக்கு எதிராக மைக்கேல் வழக்குத் தொடுத்தார். ஆனால் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, மைக்கேலின் அந்தக் குறிப்பிட்ட பேட்டியையே ஆதாரமாக வைத்து அவர் மீது கடுங்காவல் தண்டனைக்குரிய பத்து குற்றங்கள் சுமத்தப் பட்டன. மைக்கேல் எந்த அளவுக்கு ஒரு குழந்தையைப் போல் வெகுளியானவர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.

மூன்று ஆட்கள் வட்டமாக நின்று கைகளை விரித்தால் தொட்டுக் கொள்ளக் கூடிய அளவுக்கு அகலமும், வானளாவிய உயரமும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருக்கிறார் மைக்கேல். கீழே சாலைகளும், வாகனங்களும் பொம்மைகளைப் போல் தோற்றம் கொள்கின்றன. பஷீரும் அந்த மரத்தின் மீது ஏற முயற்சி செய்து முடியாமல் பாதியிலேயே ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு மைக்கேலிடம் பேசுகிறார். “உங்களுக்கு மரம் ஏறத் தெரியாதா? ” என்று பஷீரை ஆச்சரியத்துடன் கேட்கும் மைக்கேல் ” மரம் ஏறுவது எனக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு ” என்கிறார். ’ லிவிங் வித் மைக்கேல் ஜாக்ஸன் ’ இப்படியாகத் தொடங்குகிறது.

***

மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களைப் பற்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அது ஒரு அனுபவம். எக்ஸ்டஸி என்று சொல்லலாம். அல்லது மேஜிக். அவருடைய ‘பில்லி ஜீன் ’ என்ற பாடலில் சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரர் படுத்திருப்பார். அவருடைய குவளையில் மைக்கேல் ஒரு நாணயத்தைச் சுண்டி எறிவார். அது குவளையில் விழுந்ததும் குவளை தங்கக் குவளையாக மாறும். அந்தப் பிச்சைக்காரரும் கோடீஸ்வரராக மாறுவார். அத்தகைய மேஜிக்கைக் கொண்டது மைக்கேலின் பாடல்கள். என்றாலும் அதை சொற்களால் விளக்க முற்படுவது கடினம்தான். அவரது நிகழ்ச்சியைக் காண்பதற்காகக் குவியும் லட்சக் கணக்கான மக்களுக்கு என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியும். அவருடைய குரலுக்கும், நடனத்துக்கும் அத்தகைய வசியத் தன்மை இருந்தது. கேட்பவர்களையும், காண்பவர்களையும் ஒருவித பித்தநிலைக்குக் கொண்டு செல்கின்றன அவை. அதனால்தான் அவருடைய ’ ப்ளாக் அண்ட் ஒய்ட் ’ என்ற விடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பப் பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இதுதான் உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சி.

இந்த விடியோவை எடுத்த இயக்குனருக்கு மைக்கேலும் இந்தப் பாடலில் பங்கேற்ற குழந்தைகளும் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு விருந்து கொடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆர்வத்துடன் அமர்ந்திருக்கிறார் இயக்குனர். குழந்தைகளும் மைக்கேலும் இயக்குனர் மீது எக்கச்சக்கமான ஐஸ்க்ரீமைக் கொட்டுகிறார்கள். ஒரு ஐஸ்க்ரீம் மழையே அவர் மீது பொழிகிறது.

இன ஒற்றுமையை வலியுறுத்தும் ’ ப்ளாக் ஆர் ஒய்ட் ’ என்ற இந்தப் பாடலில் இடம் பெறும் நடனம் ஹார்ட் ராக் மற்றும் Rap வகையைச் சேர்ந்தது. 11 நிமிடம் கொண்ட இந்தப் பாடல், குடும்பங்களில் குழந்தைகள் எத்தகைய அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பேசுகிறது. அப்பா கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறான் அவருடைய ஐந்து வயது மகன். “நேரமாகி விட்டது; போய்த் தூங்கு ” என்று திட்டுகிறார். உடனே அந்தப் பையன் மிக அதிக சப்தத்தில் பாடலைப் போட, அதன் வேகத்தில் அடித்துக் கொண்டு போகும் அப்பா வேறோர் இடத்துக்குத் தூக்கிச் செல்லப் படுகிறார். அங்கே சிங்கங்கள் உறும, ஆதிவாசிகளோடு நடனமாடிக் கொண்டிருக்கிறார் மைக்கேல்.

மேலும் இந்தப் பாடலில் இடம் பெறும் தாய்லாந்து, இந்திய, ஜப்பானிய நடனங்களும் அதற்கு ஏற்ப மைக்கேல் ஆடுவதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு காட்சியில் செவ்விந்தியப் பழங்குடியினருக்கும், மற்றொரு இனத்துக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது மைக்கேல் ஒரு குழந்தையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதன் மூலமாக மைக்கேல் முன்வைக்கும் அரசியல் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

பாடலின் இரண்டாவது பகுதியில் ஒரு கறுஞ்சிறுத்தையாக உள்ளே நுழையும் மைக்கேல், பிறகு மைக்கேலாக மாறி நான்கரை நிமிடங்களுக்கு எந்தப் பக்க வாத்தியப் பின்னணியும் இல்லாமல் ஒரு அற்புதமான நடனத்தை ஆடுகிறார். கறுப்பின மக்களின் அத்தனை சீற்றத்தையும் வெளிப்படுத்தும் மிகக் கடுமையான ஆட்டம் அது. மைக்கேலின் ‘நிலவு நடை ’ க்கு அடுத்தபடியாக என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஆட்டம் இது. இனவாதத்தை முன்வைக்கும் அத்தனை இடங்களும் மைக்கேலின் நடனத்தின் சீற்றம் தாங்க முடியாமல் பற்றி எரிகின்றன. மைக்கேல் வெறும் ஒரு பாடகரோ அல்லது நடனக்காரரோ மட்டும் அல்ல; அவர் ஒரு புரட்சிகரமான அரசியலைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம்.

மைக்கேலின் அரசியல் பற்றி அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை. அவருடைய பாடல் வரிகளும், பாடலில் வரும் காட்சிகளுமே அவர் முன்வைக்கும் அரசியலைத் தெளிவாகச் சொல்லுகின்றன. அவருடைய முக்கியமான பாடல்களில் ஒன்றான ‘மேன் இன் தெ மிரர் ’ – இல் வரும் காட்சிப் படிமங்கள்: நெல்சன் மண்டேலா, காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மதர் தெரஸா, எலும்புக் கூடுகளைப் போல் தோற்றமளிக்கும் ஆஃப்ரிக்க அகதிகள், போராட்டங்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சு, போர்க் காட்சிகள், டாங்கிகள், போரினால் உடல் பாகங்களை இழந்து மருத்துவமனையில் கிடக்கும் குழந்தைகள், இன வாதத்தை ஆதரிக்கும் சுவரொட்டிகள், ஹிட்லரின் ஆவேசமான பேச்சு, வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் பெருநகரத்து அனாதைகள், டாங்கிக்கு முன்னே ஓடும் ஒரு சிறுமி, Farms Not Arms என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டி, ஜான் லெனனின் புகைப்படத்துடன் 8 டிசம்பர் 1980 என்று எழுதப்பட்ட அட்டை (அது ஜான் லெனன் கொல்லப் பட்ட தினம்), செர்னோபில் விபத்து, அணு ஆயுதப் பேரழிவுகள், நாஜி ராணுவத்தின் அணிவகுப்பு என்று கிட்டத்தட்ட 20-ஆம் நூற்றாண்டின் அரசியல் வரலாறே இந்தப் பாடல் காட்சிகளில் காண்பிக்கப் படுகிறது.

மைக்கேலின் அரசியல் பற்றிப் பேசும் போது பொதுவாக எல்லா ஊடகத்தினாலும் எழுத்தாளர்களாலும் பேசப் படாத வேறோர் விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அது, மைக்கேலின் மத மாற்றம். அவர் நவம்பர் 2008-இல் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினார். நவம்பர் 2003-இல் ஒரு சிறுவனை பாலியல் ரீதியாக உபயோகப் படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு மைக்கேல் சிறைக்குச் சென்ற போதுதான் அவர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறுவதாகப் பேச்சு எழுந்தது. பின்னர், 2005-இல் அவர் நிரபராதி என்று தீர்ப்பு கிடைத்ததுமே அவர் பஹ்ரைனுக்குக் குடி பெயர்ந்தார். இதற்கு மைக்கேலுக்கு உதவிகரமாக இருந்தவர் பஹ்ரைனின் இளவரசர்.

மைக்கேலின் மத மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது, அமெரிக்காவின் ஆன்மீக வீழ்ச்சிதான். இங்கே நான் குறிப்பிடுவது மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பணத்துக்காகவே மைக்கேல் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அது மட்டும் அல்லாமல், கறுப்பின மக்கள் மீது தொடர்ந்து அமெரிக்க சமூகம் ஒரு வன்மமான பழி தீர்க்கும் பகைமை உணர்வையே கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு சமயம் ஒரு மாநிலத்தின் நீதிபதி ஒருவர் ஒரு பெண்ணை வன்கலவி செய்து விட்டதால் கைது செய்யப் பட்டார். அதே நேரத்தில் ஒரு குத்துச் சண்டை வீரர் ஒரு ஈவ் டீசிங் வழக்கில் கைதானார். ஆனால் ஊடகங்களில் அந்தக் குத்துச் சண்டைக்காரரின் செய்தியே பிரதான இடம் பெற்றிருந்தது. காரணம், நீதிபதி வெள்ளைக்காரர்; குத்துச் சண்டை வீரர் கறுப்பர்.

அமெரிக்க சமூகம் இன வேற்றுமையை ஒழித்து விட்டதாக உலகத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்தச் சமூகத்தின் வெள்ளை இனத்தவரிடையே இன்னமும் ஆழமாக இனவெறி ஊறிக் கிடக்கிறது. ஒரு கறுப்பன் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டால் ’ இதுதான் உன்னுடைய தன்மை; நீ இன்னும் மிருக நிலையிலிருந்து முன்னேற்றம் அடையவில்லை; உன் முகம் மிருகத்தைப் போல் இருக்கிறது. உன் நிறம் மிருகத்தைப் போல் இருக்கிறது; உன் தலைமுடி மிருகத்தைப் போல் இருக்கிறது. நீ உன்னுடைய தாய்பூமியான ஆஃப்ரிக்காவுக்கே திரும்பிப் போ. நீ இன்னும் மனிதனாக வளர்ச்சி அடையவில்லை. அதனால்தான் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுகிறாய் ’ என்று சொல்லாமல் சொல்லி அந்தக் கறுப்பின மனிதனை விளிம்புக்குத் தள்ளுகிறது அமெரிக்க வெள்ளைச் சமூகம். இதற்கு அமெரிக்க ஊடகங்களும் துணி போகின்றன. இல்லாவிட்டால் மால்கம் எக்ஸ் சிறையில் இருந்தபோது 1948-இல் ஏன் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினார்?

சரி, அது பழைய காலம் என்று எடுத்துக் கொண்டால் குத்துச் சண்டை வீரரான கேஷியஸ் க்ளே ஏன் முகம்மது அலியாக மாறினார்? அது நடந்தது 1965-இல். ஆஃப்ரோ அமெரிக்கர்களைப் பற்றி அமெரிக்க வெள்ளைச் சமூகம் கொண்டிருந்த மனோபாவம்தான் இதற்கெல்லாம் காரணம். இதைப் பற்றி ஆய்வு செய்தால் நாம் ’ நேஷன் ஆஃப் இஸ்லாம் ’ என்ற அமைப்பு தோன்றியதன் வரலாற்றுப் பின்னணிக்குப் போய்ச் சேருவோம்.

மைக்கேலின் குடும்பத்தில் அவரது மூத்த சகோதரரான ஜெர்மெய்ன் ஜாக்ஸனும் 1989-இல் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினார். பெயருக்காக மாறாமல் தொழுகை, நோன்பு போன்ற மார்க்க வழிமுறைகளையும் பின்பற்றினார். அப்போது அவர் “மைக்கேலும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினால் அது அவனது வேதனையைப் போக்கும்; அது அவனுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவனுக்கு அமைதியைக் கொடுக்கும் ” என்று தெரிவித்தார்.

ஒருக்கால், மைக்கேல் தன் அண்ணன் சொன்னதைப் போல் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமைப் பின்பற்றியிருந்தால் இப்படி ஒரு செயற்கையான அகால மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால், மைக்கேல் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு பத்திரிகைகளும், அமெரிக்க வெள்ளைச் சமூகமும் மைக்கேலுக்கு மிக எதிர்ப்பாக இருந்த நிலையில் அவருடன் கூடவே இருந்து அவருக்குத் தேவையான தார்மீக ஆதரவை அளித்தவர் இந்த ஜெர்மெய்ன்.

ஜெர்மெய்ன் கூறியது போல் வலியைப் போக்குவதற்கு ஆன்மீகம் இருக்க, அதை விட்டு விட்டுத் தான் வாழ்நாள் பூராவும் எதிர்த்த அமெரிக்க வெகுஜன நுகர்வுக் கலாச்சாரம் அளித்த செயற்கையான வலி நிவாரணி மாத்திரைகளை நாடியதுதான் மைக்கேலின் அகால மரணத்துக்குக் காரணமாகி விட்டது. இந்தப் போக்கு மைக்கேலிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததற்கு அறிகுறிதான் அவர் தன்னுடைய உடலை வெள்ளைக்காரர்களைப் போல் மாற்றிக் கொண்ட நடவடிக்கைகளும் என்று சொல்லலாம். முதலில் கறுப்பின மக்களின் பிரத்யேகமான கம்பிச் சுரள் தலைமுடியை அவர் நீளமாக மாற்றிக் கொண்டார். தட்டை மூக்கை நீளமாக மாற்றிப் பின்னர் அதிலேயே பல ப்ளாஸ்டிக் ஸர்ஜரிகளைச் செய்து கொண்டார். சருமத்தையும் வெள்ளை நிறமாக மாற்றி அமைத்துக் கொண்டார். எல்லாம் சேர்ந்து அவரை ஒரு வேற்றுக் கிரகத்து மனிதனைப் போல் மாற்றியது.

மைக்கேலின் பாடல்கள் அனைத்தும் போருக்கு எதிரானவை; அதிகாரத்துக்கு எதிரானவை; உலக சமாதானத்தைப் பேசுபவை. ஆனால் அமெரிக்காவோ தொடர்ந்து உலக அளவில் போர்ச் சூழலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி ராணுவத்தை அனுப்பி ஈராக்கையே ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு, பிறகு, ஈராக்கில் ரசாயன ஆயுதம் இல்லை என்றது அமெரிக்கா. ஆஃப்கனில் ரஷ்ய ஆதிக்கத்தை நிறுத்துவதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டுப் பின்னர் தாலிபான்களை அழிப்பதற்காக ராணுவத்தை அனுப்பி ஆஃப்கனையே காலி செய்து விட்டது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்தப் போர் ஆதரவுக் கொள்கையை எதிர்த்துத்தான் அறுபதுகளில் பீட் எழுத்தாளர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களும் மூன்று வெவ்வேறு விதமான ஆன்மீக வழிகளில் சென்றார்கள். வில்லியம் பர்ரோஸ் அரபி மொழி கற்றுக் கொண்டு மொராக்கோவுக்குச் சென்றார். ஜேக் கெரோவாக் பௌத்தத்தை நாடி திபெத் சென்றார். ஆலன் கின்ஸ்பெர்க் காவி வேஷ்டியை உடுத்திக் கொண்டு காசிக்கு வந்து சேர்ந்தார். இந்த பீட் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்தான் ஜான் லெனனும்.

***

1979-இல் ஒரு கடினமான நடனப் பயிற்சியின் போது மைக்கேலின் மூக்கு உடைந்தது. அதனாலேயே ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டி வந்தது. ஆனால் இந்தப் பிரச்சினை இதோடு நிற்கவில்லை. 1984. மைக்கேலின் வயது அப்போது 25. 3000 பார்வையாளர்களுக்கு முன்னே பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கிறார். அப்போது மேடையில் fireworks- இன் இடையே மைக்கேலின் முடியில் தீப்பற்றி விடுகிறது. அது அவருடைய தலையிலும் பற்றி விட அங்கேயும் ப்ளாஸ்டிக் சரிஜரி செய்யப்பட்டது. இப்படியாகத்தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி, வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றோடு மைக்கேலுக்குத் தொடர்பு ஏற்பட்டது.

மைக்கேல் ஜாக்ஸனின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் எழுதிக் கொண்டே போக வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு பாடலிலும் அவ்வளவு செய்தி இருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு நாளும் அவருடைய ‘Heal the World’ என்ற பாடலோடுதான் தொடங்குகிறது. அதை ஒரு பிரார்த்தனைப் பாடலாகவே நான் கருதுகிறேன். அந்தப் பாடலின் சில வரிகள் கீழே:

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

***

And The Dream We Were
Conceived In
Will Reveal A Joyful Face
And The World We
Once Believed In
Will Shine Again In Grace
Then Why Do We Keep
Strangling Life
Wound This Earth
Crucify Its Soul
Though It's Plain To See
This World Is Heavenly
Be God's Glow

இதேபோல் மைக்கேலின் We are the World என்ற பாடலும் இந்த உலகின் தேசிய கீதம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அன்பின் வலிமையை உணர்த்தக் கூடிய பாடல்.

***

1. உஷர் பாடிய ‘Gone too soon’ .

2 . Shaheen Jafargholi என்ற 12 வயதுச் சிறுவன் பாடிய அஞ்சலிப் பாடல்.

இக்கட்டுரையோடு சேர்த்துக் கேட்க வேண்டிய பாடல்கள் இவை. மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி அஞ்சலியின் போது பாடப் பட்டவை:

3. மைக்கேல் ஜாக்ஸனின் சுயசரிதை ‘மூன்வாக் ’. இந்தப் புத்தகம் ஜாக்குலின் கென்னடியால் ‘எடிட் ’ செய்யப்பட்டது.

Saturday 21 May 2011

தலையங்கம்:தலைகுனிவு!



First Published : 21 May 2011 04:24:45 AM IST


 இந்தியாவுக்குள் புலியைப்போல் பாயும் நமது மத்திய புலனாய்வுத்துறைக்கு வெளிநாட்டு விவகாரம் என்றால் காய்ச்சல் வந்துவிடுகிறதே, அது ஏன் என்று புரியவில்லை.  ÷போபர்ஸ் வழக்கில் குவாத்ரோச்சியை விரட்டிக் கொண்டு நாடு நாடாகச் சென்றதுதான் மிச்சம். ஒவ்வொரு கட்டத்திலும் அவரைத் தப்பவிடுவதில் காட்டிய முனைப்பை, சிக்க வைப்பதில் காட்டவில்லை.  ÷குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த 2002-ம் ஆண்டில் மலேசிய நீதிமன்றத்தை சிபிஐ நாடியது. ஆனால், உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.  ÷இதற்குப் பிறகு ஆர்ஜென்டினா போலீஸôரால் குவாத்ரோச்சி கைது செய்யப்பட்டபோது, அங்கிருந்து அவரைப் பிடித்து வருவதில் சிபிஐ முனைப்புக் காட்டுவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆர்ஜென்டினாவுடன் குற்றவாளிகளைப் பகிர்ந்துகொள்ளும் எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லாததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டியதாயிற்று.  ÷சிபிஐயின் சார்பில் ஆர்ஜென்டினா நீதிமன்றத்தில் என்ன வாதாடினார்களோ தெரியாது. கடும் எரிச்சலடைந்த நீதிபதி, குவாத்ரோச்சியை விடுவித்ததுடன், அவருக்கு வழக்குச் செலவைக் கொடுத்துவிடும்படி சிபிஐக்கு உத்தரவிட்டார். இதுபோக, வழக்கறிஞர் செலவு, மொழிபெயர்ப்புச் செலவு என இந்த விசாரணைக்கு மட்டும் ரூ.40 லட்சம் வீணானதுதான் மிச்சம். தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து குவாத்ரோச்சியை நீக்கியதுடன், வழக்கையும் மூடியிருக்கிறது சிபிஐ.  ÷போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆன்டர்சனின் கூட்டாளிபோல சிபிஐ நடந்து கொண்டதோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. ஆன்டர்சன் இந்தியாவிலிருந்து சிபிஐக்குத் தெரியாமல் தப்பி ஓடியிருக்க முடியுமா?  ÷ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு 10 ஆண்டுகள்வரை அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கப்பட்டது. ஆனால், கவனக்குறைவு காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றுகூறி குற்றச்சாட்டைக் குறைத்து 1996-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வெறும் 2 ஆண்டு சிறைத் தண்டனைதான் வழங்கியது.  ÷குற்றச்சாட்டுகளைக் குறைத்து 1996-ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மறுபரிசீலனை மனு தாக்கல் செய்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று மானக்கேடான கேள்விகளைக் கேட்ட உச்ச நீதிமன்றம், சிபிஐயின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இப்போது போபால் வழக்கும் திக்குத் தெரியாமல் நிற்கிறது.  ÷சிபிஐயின் கவனக்குறைவு இத்துடன் முடிந்துவிடவில்லை. புரூலியா ஆயுத மழை வழக்கில் தேடப்பட்டு வரும் கிம் டேவியைப் பிடித்து வருவதற்காக டென்மார்க் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காகச் சென்ற சிபிஐ மூத்த அதிகாரிகள் கிம் டேவிக்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றம் வழங்கிய கைது உத்தரவை கையோடு எடுத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அதுவும் கிம் டேவியின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பிறகுதான் சிபிஐ சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கைது உத்தரவு காலாவதியானது என்று சிபிஐ அதிகாரிகளுக்கே தெரிந்திருக்கிறது. இப்போது தொங்கிய முகத்துடன் சிபிஐ அதிகாரிகள் கைது உத்தரவை நீட்டிப்பதற்காக மனுச் செய்திருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் தாண்டி சிபிஐ அமைப்பு இப்போது உலகின் கேலிக்கு ஆளாகியிருக்கிறது. இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானுக்குத் தப்பியோடியவர்கள் பட்டியலை இந்திய உள்துறை வெளியிட்டது. ஏற்கெனவே இந்தப் பட்டியல் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுவிட்டது என்கிற உபரித் தகவலையும் தெரிவித்தது.  இந்தப் பட்டியலில் உள்ள ஒரு பெயர் வாசூல் கமார்கான். மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த இந்த வாசூல் கமார் கான் கடந்த ஆண்டே மும்பை போலீஸôலும், பயங்கரவாத எதிர்ப்புப் படையாலும் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், மும்பையை அடுத்த தாணேவில் தங்கி இருக்கிறார். உள்துறை வெளியிட்ட பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றதை ஒரு பத்திரிகை கண்டுபிடித்து அம்பலமாக்கிவிட்டது.  அதே பட்டியலில் இருக்கும் ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் மும்பையில்தான் இருக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அவ்வளவு ஏன், கடந்த ஆண்டிலிருந்து தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) பிடியில் இருக்கும் மணிப்பூர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ராஜ்குமார் மேகனின் பெயரும் சிபிஐயின் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கிறது.  முறையாக விசாரிக்காமல் ஏனோ தானோவென்றா பாகிஸ்தானில் இருப்பதாக நாம் சந்தேகப்படும், நம்மால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை அளிப்பது? நெருக்கடி முற்றுவதைப் புரிந்துகொண்ட சிபிஐ இப்போது தேடப்படுவோர் பட்டியலை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தீவிரவாதிகள் உங்கள் நாட்டில் தான் இருக்கிறார்களா என்று முதலில் தீரவிசாரித்துவிட்டு எங்களைக் குற்றம்சாட்டுங்கள் என்று பாகிஸ்தான் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.  ÷இதெல்லாம் வெறும் கவனக்குறைவு என்றும், எல்லோருக்கும் நேரும் பிழைதான் என்றும்கூறி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என்றுகூறிக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு, இப்போது எத்தகைய அவமானமும் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறதோ அதேயளவு அவமானம் கான் விவகாரத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தேடப்படுவோர் பட்டியலில் இருந்து கான் பெயரை நீக்கிவிட்டதாலோ, கானின் கைது உத்தரவை நீட்டித்துப் பெறுவதாலோ மட்டும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைத்துவிட முடியாது.

Friday 20 May 2011

முள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்குமூலங்கள்.

by Anbu A Anbu on Tuesday, May 17, 2011 at 7:48am

  • 1. செல்வம் (சித்தப்பா முறையானவர்):  
 'குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் விடுவார்கள். மீதிப்பேர் அன்று பட்டினிதான். இப்படித்தான் நாட்கள் ஓடின. இப்படியான நிலையில் என் மூன்று வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஏறக்குறை 7 மாதங்களாக சரியான உணவு கிடைக்காததால் மிகவும் வாடிப்போய் இருந்தான். அது போதாதென்று வயிற்றுப்போக்கும் வந்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் இரவு பகலாக அவனை அணைத்தபடி அழுதோம். மருத்துவரிடம் காட்ட அனுமதிக்கும்படி இராணுவத்தினரிடம் மன்றாடினோம். அப்படிச் செல்வதாயின் குழந்தையைத் தனியே தங்களுடன்தான் விடவேண்டும் என்றார்கள். அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. அன்று எங்களுக்கு இருந்த ஒரே ஊக்க சக்தி எங்கள் குழந்தைதான். அதனால் அவனை நாங்களே வைத்திருந்தோம். கம்பி வேலிக்கு அருகில் வெளியில் இருந்து பார்க்க வருவோர் வரும்வேளை, எங்கள் மகனைத் தூக்கி எறிகிறோம். கொண்டுசெல்லுங்கள். எங்கள் உறவினர்களுக்கு அறியத் தாருங்கள் என்று கதறுவோம். எங்களைப்போன்றே பல பெற்றோர்கள் கதறி அழுவார்கள். வருபவர்களும் கண் கலங்கி அழுவார்கள்.
//அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது//
ஆனால் இராணுவத்தினர் அவர்கள் நெருங்கமுடியாதபடி விரட்டுவார்கள். வெளிநாடு வாழ் உறவினர்கள் பணம் அனுப்பி கருணா கும்பல் மூலமாக இராணுவத்தினருக்கு பணம் கொடுக்கப்பட்ட செட்- அப் செய்யப்பட்டிருந்தால் மாத்திரம் குழந்தைகள் கம்பி வேலிகளுக்கு மேலாகத் தூக்கிக்கொடுக்கப்படும்போது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். கம்பிவேலிக்கு அருகில் வந்துபார்த்த யாரென்று இன்றுவரை அறியாத உறவொன்று மருத்துவரைப் பார்த்து எங்கள் குழந்தையின் நோயைக் கூறி, தானே கடையில் மருந்தும் வாங்கிவந்து இராணுவத்தினர் அறியாமல் கொடுத்தார். அதன்பின்னர், எங்கள் மகன் குணமடைந்தான். வெளிநாட்டில் இருந்த என் அண்ணி இராணுவத்தினருக்கு டக்ளசின் ஆட்கள் மூலமாகப் பணம் கொடுத்துப் பின்னர் நாம் வெளியே வந்தோம்'.

  • 2 . வா. சண்முகநாதன்: (வயது 13 - எனக்கு மாமி உறவான ஒருவரின் மகள்)

'அன்று என் அம்மா, சின்னம்மா இருவரும் இயலாமல் இருந்த எங்கள் அம்மம்மாவுக்கு காலைக்கடன் முடிக்க உதவிசெய்வதற்காய் பங்கருக்கு வெளியே வந்தனர். நான் (எனக்கு வயது 13), என் தங்கை (10), தம்பி (6), மற்றும் சின்னம்மாவின் மகன் (4), மகள் (1), எங்கள் அப்பா ஆகியோர் பங்கருக்குள்ளாகவே இருந்தோம். சின்னம்மாவின் சித்தப்பா சென்ற ஆண்டு வட்டக்கச்சியில் சிறீலங்கா விமானப்படை குண்டுவீசியதில் இறந்துபோனார். பல நாட்கள் சரியான உணவு இல்லை. பசி மயக்கம், களைப்பு, எறிகணை, விமானக்குண்டுவீச்சு என்று தொடர்ந்தபடி இருந்ததால் பயமாக இருந்தது. அப்போது எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அப்பா பங்கரைவிட்டு எட்டிப்பார்த்து அம்மாவைக் கூப்பிட்டார். அம்மாவும், சின்னம்மாவும் உடனடியாக ஓடி வராமல், நடக்க இயலாமல் இருந்த அம்மம்மாவைத் தூக்கியபடி ஓடிவந்தார்கள். அப்போது மற்றொரு செல் வீழ்ந்து வெடித்தது. எறிகணைவீச்சு ஓய்ந்தபின் ஓடிச்சென்று பார்த்தால், எங்கும் சதைகளும், உடல் உறுப்புகளும்... அம்மா நெஞ்சில் கை வைத்தேன். பெரும் ஓட்டையே அங்கிருந்தது. சின்னம்மாவுக்குப் பாதித் தலை இருக்கவில்லை. அம்மம்மாவின் காதில் இரத்தம் வடிந்திருந்தது. அனைவரது உடல்களையும் உடனடியாகப் புதைக்கமுடியவில்லை. இன்னும் பலர் கொல்லப்பட்டிருந்தனர். எறிகணை வீச்சுத் தொடர்ந்தது. அம்மாவின் உடலை அணைத்தபடி பங்கருக்குள் இருந்து அப்பா அழுதார். நாங்களும் அழுதோம். அப்பாவுடன் தனியாக இப்போது நாங்கள் ஐவரும். 4 மணிநேரத்துக்குப் பின்னர், வெளியே வந்து, ஒரு இடத்தில் மூவரது உடல்களையும் புதைத்தோம். போர் முடியும் நேரம் முகாமுக்கு வந்து சேர்ந்தோம். முகாம் என்று ஒன்றும் அப்போது இருக்கவில்லை. வெட்ட வெளியில்தான் படுத்தோம். எழுந்தோம். என்னால் முடியவில்லை. ஆனால் அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் பதிலாக நான்தானே என் சகோதரர்களைப் பார்க்கவேண்டும் என்று தைரியத்தோடு இருந்தேன். ஒரு வாரமாக மிகவும் முடியாமல்போனது. காய்ச்சலோடு படுத்திருந்தேன். அப்போது அங்குவந்த இராணுவத்தினர் என் தங்கையை விசாரிக்கவேண்டும், அனுப்புங்கள் என்று இழுத்தார்கள். அப்பா விட மாட்டார். அவள் குழந்தை, அவளை விடுங்கள் என்று கெஞ்சுவார். ஒரு சில நாட்கள் இப்படி நடந்தது. வேறு பெண்பிள்ளைகள் பலரையும்கூட இப்படி வந்து இழுத்தார்கள். சிலரை இழுத்துச் சென்றுவிட்டார்கள். பெற்றோர்கள் இல்லாதவர்கள் போனவர்கள் போனவர்கள்தான். திரும்பிவந்த பிள்ளைகள் பலரும் நடைபிணங்களாய்த்தான் வந்தனர். சிலர் பின்னர் முகாமிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அடுத்த நாளும் அவர்கள் வந்தால் என்ன செய்வது என்று அப்பா கவலையோடு இருந்தார். எங்களருகில் இருந்த மற்றொரு குடும்பத்தினரது மகளையும் இப்படித்தான் இழுக்க வந்தார்கள். அவர்களும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவு எடுத்தனர். அடுத்த நாள் மருத்துவ உதவிசெய்ய வந்த தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் என் தங்கையையும், பக்கத்தில் இருந்தவர்களது மகளையும் கொடுத்து அவர்களுக்கு உடல் நலமில்லையாதலால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்று கூறினார். மருத்துவமனைக்கு அருகில் ஒரு கிறித்தவ தேவாலயம் இருப்பது அப்பாவுக்குத் தெரிந்திருந்தது. மருத்துவமனையில் இராணுவ வண்டி நோயாளர்களை இறக்கியதும் எப்படியாவது தப்பித்து அந்த தேவாலயத்துக்குச் சென்று பாதிரியாரின் உதவியைக் கோருங்கள் என்று என் தங்கைக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. அப்படியே அவர்கள் இருவரும் எப்படியோ தப்பித்து பாதிரியாரிடம் உதவிகோரி, அவரும் அவர்களைப் பாதுகாப்பாய் மன்னாருக்கு அனுப்பிவிட்டார். இப்போது என் தங்கை அங்குதான் உள்ளதாக உறவினர்கள் சொன்னார்கள். என் தம்பி, சின்னம்மாவின் 4 வயது, 1 வயதுக் குழந்தை ஆகிய அனைவரையும் கவனித்தபடி நான் இன்றும் முகாமிலேயே இருக்கிறேன். சின்னம்மாவின், சித்தப்பா வழி உறவினர்கள், எத்தனையோ தடவை சின்னம்மாவின் குழந்தைகளைத் தங்களிடம் தந்துவிடும்படி இராணுவத்தினரிடம் மன்றாடிவிட்டனர். அவர்கள் மறுத்துவிட்டனர். அந்த இரு குழந்தைகளையும் தனியே விட்டு நாங்கள் மட்டும் வெளியே செல்ல விரும்பாததால் நாங்களும் இங்கிருக்கிறோம். வெளிநாட்டில் வாழும் என் மாமாவும் மாமியும் கருணாவின் ஆட்களுக்குப் பணம்கொடுத்து எங்களை வெளியே எடுக்கமுயன்றனர். ஆனால் அவர்கள் பணத்தையும் வாங்கிப்பின் ஏமாற்றிவிட்டனர். இப்போதும் அவர்கள் வேறுவழிகளில் முயன்றபடி உள்ளனர். நான் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் மிகுந்த மதிப்பெண்கள் பெற்று புலமைப் பரிசிலும் பெற்றேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வியே இல்லை. எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை'.
//அம்மா நெஞ்சில் கை வைத்தேன். பெரும் ஓட்டையே அங்கிருந்தது. சின்னம்மாவுக்குப் பாதித் தலை இருக்கவில்லை. அம்மம்மாவின் காதில் இரத்தம் வடிந்திருந்தது. அனைவரது உடல்களையும் உடனடியாகப் புதைக்கமுடியவில்லை. இன்னும் பலர் கொல்லப்பட்டிருந்தனர். எறிகணை வீச்சுத் தொடர்ந்தது. அம்மாவின் உடலை அணைத்தபடி பங்கருக்குள் இருந்து அப்பா அழுதார். நாங்களும் அழுதோம்//
  • 3. திரு. சத்தியன்  (நெருங்கிய நண்பர்): 

'நான் பல ஆண்டுகள் என்னைப் போராட்டத்தோடு இணைத்திருந்தேன். அனாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவென தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட செஞ்சோலை இல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத்தான் நான் காதலித்துத் திருமணம் செய்தேன். ஒருவயதுக் குழந்தை இருந்தாள். களமுனையில் நின்றிருந்தேன். அடுத்த நொடி எனக்கு என்ன ஆகுமோ என்று தெரியாது. என் மனைவியும், மகளும் எங்கிருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எப்படியோ இறைவன் அருளால் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம். நாங்கள் மூவரும் இன்னும் சந்திக்கவில்லை. நான் வேறொரு முகாமில் அடைபட்டு, சித்திரவதைபடுத்தப்பட்டேன். அவர்கள் இருவரும் வேறு முகாமில். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று எனக்கும், நான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர்களுக்கும் நாங்கள் முகாம்களுக்கு வந்தபிறகுதான் தெரியவந்தது. வெளிநாட்டில் வாழும் என் சகோதரர்கள் பெருந்தொகைப்பணத்தை இராணுவத்தினருக்குக் கொடுத்து என்னை வெளியே எடுத்துவிட்டனர். என் முகாமில் இருந்து வெளியேற்றப்படுவது எப்படி என்றால், நாள்தோறும் சித்திரவதை, நோய், பாலியல் வல்லுறவு கெர்டுமைகளால் இறந்த உடல்களை மாட்டுவண்டியில்போட்டு வெளியே கொண்டுபோவார்கள். அந்த உடலங்களோடு வெளியே தப்பிக்க ஏற்பாடுசெய்யப்பட்டவர்களையும் கொண்டுபோய்ப் போடுவார்கள். சடலங்களோடு சடலங்களாகக் கிடப்போம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி ஓடச்சொல்வார்கள். அப்படித்தான் நான் தப்பித்தேன். உடனடியாக என்னை என் உறவினர்கள் அயல்நாடு ஒன்றுக்கு எடுத்துவிட்டனர். இங்கிருந்தபடி முகாமுக்குச் சென்ற உறவினர் ஒருவரது தொலைபேசி மூலமாக என் மனைவியிடம் பேசினேன். போர் உச்சகட்ட நேரத்தில், ஆயிரமாயிரமாய்ப் பிணங்கள் விழுந்துகொண்டிருக்க, எந்த நொடி தான் சாவேனோ என்று அறியாது தவித்து, அப்படி ஏதாவது தனக்கு நடந்துவிட்டால் எங்கள் ஒரு வயதுக்குழந்தையின் கதி என்ன என்று நினைத்து பல நாட்கள் அழுததாகவும், குழந்தையையும் கொன்று தானும் இறந்திடலாமா என்று பலமுறை யோசித்ததாகவும் கூறி அழுதாள்'.

  • 4. பத்மன் (எனக்கு தம்பி முறையானவர்):

எறிகணை வீழ்ந்து வெடித்தது. எழுந்தபோது அருகில் இருந்த தோழர்கள் இருவரும் இறந்துகிடந்தார்கள். எழ முயற்சித்தேன். முடியவில்லை. வயிற்றில் ஏதோ பிசுபிசுப்பாய் உணர்ந்தேன். தொட்டுப்பார்த்தால் குழாயால் நீர் கொட்டுவது போல் குருதி குபுகுபுவென்று வந்தது. அருகில் ஆள் அரவம் இல்லை. எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாய் இருந்தது. மெதுவாய் ஊர்ந்து ஊர்ந்து சென்றேன். வீதி ஒன்றில் மயங்கிவிட்டேன். லேசாக மயக்கம் தெளிந்தபோது தமிழீழ மருத்துவத்துறை இளையவர்கள் இருவர் பேசுவது கேட்டது. எங்கும் கதறல் சத்தம். 'ஈரலில் காயம்போலிருக்கு.. ஒன்றும்செய்ய முடியாது" என்று ஒருவர் சொல்ல, மற்றவர்-ஒரு பெண் பிள்ளை, 'இல்லை...மூத்திரப்பையில்தான் காயம்போலுள்ளது சிகிச்சை அளி" என்றார். நான் மீண்டும் மயங்கிவிட்டேன். எழுந்தபோது எல்லாம் அடங்கியிருந்தது. மருத்துவ இடம் முழுதும் பிணக்காடாய் இருந்தது. அங்கு எதுவும் இருக்கவில்லை. மருத்துவம் அளிக்கப்பட்ட அந்தத் தற்காலிக இடமே எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. எங்கும் இரத்தமும் சதைத்துண்டங்களும். என்னால் எழும்ப முடியவில்லை. ஊர்ந்து ஊர்ந்து ஒரு பங்கருக்குள் வந்தேன். அங்கு அருகருகே இருந்த பல பங்கர்களுக்குள் ஆயிரக் கணக்கான காயப்பட்ட மக்களும், போராளிகளும் இருந்தனர். எறிகணைகள் பங்கர்களுக்குள்ளும், அருகாலும் வீழ்ந்து வெடித்தபடி இருந்தது. மக்கள் கூட்டமாய் போகும் இடத்தை நோக்கி கொஞ்சம் நகர முடிந்தவர்கள் நகர ஆரம்பித்தோம். கால் இல்லாதவர்கள், நகர முடியாதவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கர்களுக்குள்ளாகவே இருந்தனர். நான் முகாம் வந்து, அங்கிருந்து மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அங்கு மக்களைப் பார்வையிடவந்த ஒரு தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உதவியால், அவரது அடையாள அட்டையைக் காட்டி வெளியே வந்துவிட்டேன். அன்று அந்த நாள், வரமுடியாமல் இயலா நிலையில் பங்கர்களுக்குள் இருந்தவர்களை இராணுவம் ஒவ்வொருவராய்ச் சுட்டுக்கொன்று, குற்றுயிராய் இருந்தவர்களை அப்படியேவிட்டு பங்கர்களை மண்போட்டு மூடியதாக இன்று அறிந்து தூக்கமின்றித் தவித்து அழுகிறேன். நான் பங்கரைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தபோது, 'அண்ணா எனக்குத்தான் இரு கால்களும் இல்லை.. என்னால் வர முடியாது. உங்களால் முடியும். முயற்சிசெய்து ஊர்ந்து போங்கள் அண்ணா..." என்று என்னை ஊக்கப்படுத்தி அனுப்பிய ஒரு சின்னத்தம்பியின் முகம் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
//'அண்ணா எனக்குத்தான் இரு கால்களும் இல்லை.. என்னால் வர முடியாது. உங்களால் முடியும். முயற்சிசெய்து ஊர்ந்து போங்கள் அண்ணா..." என்று என்னை ஊக்கப்படுத்தி அனுப்பிய ஒரு சின்னத்தம்பியின் முகம் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது//
5.  திருமதி. பரராசசிங்கம்: (முள்ளிவாய்க்காலில் இருந்தபோது சொன்னது)
என் சொந்த இடம் மன்னார். அங்கிருந்து இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து, ஒவ்வொரு இடமாய்த் திரிந்தோம். 11 முறை இடம்பெயர்ந்துவிட்டோம். எனக்கு ஐந்து குழந்தைகள். ஒவ்வொரு இடத்திலும் நடந்த எறிகணை வீச்சிலும், வான்குண்டுத்தாக்குதலிலும் என் குழந்தைகளை ஒவ்வொருவராய் இழந்துவிட்டேன். இன்று மிச்சமிருப்பது இரண்டுபேர் தான். பல ஆண்டுகளுக்கு முன்னரே இராணுவத்தினர் பிடித்துக்கொண்டுசென்ற என் கணவர் பின்னர் வரவேயில்லை. குடும்பத்தில் வேறு பலரை இழந்துவிட்டேன். வாழ்வதற்கு வழியில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கஞ்சி கொடுத்தால் மட்டுமே கொஞ்சம் பசி தீர்க்கப்படும். இன்று முள்ளிவாய்க்காலில் இருக்கிறேன். நாளை என்ன ஆகுமோ தெரியாது.'
//எனக்கு ஐந்து குழந்தைகள். ஒவ்வொரு இடத்திலும் நடந்த எறிகணை வீச்சிலும், வான்குண்டுத்தாக்குதலிலும் என் குழந்தைகளை ஒவ்வொருவராய் இழந்துவிட்டேன். இன்று மிச்சமிருப்பது இரண்டுபேர்//
  • 6. குணரட்னம்: (நெருங்கிய தோழரின் அண்ணன்)

எனது தம்பி சிறீலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் மார்ச் மாதம் உயிரிழந்தான். அவனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. மூன்று வயது மகன் இருந்தான். அவனது மனைவி மீண்டும் கர்ப்பம் தரிந்திருந்தார். இறுதியாக முள்ளிவாய்க்காலில் இருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினார் என் தம்பியின் மனைவி. மே மாதமளவில் என் தம்பியின் இரண்டாவது குழந்தை பிறந்திருக்கவேண்டும். சிலர் வாய்வழியாகக்கூறிய தகவல்கள் மூலமாகக் குழந்தை பிறந்ததை அறிந்தேன். ஆனால் பின்னர் பேரிடியாக ஒரு செய்தி வந்தது. அது என்னவென்றால் தொடர்ந்த எறிகணை வீச்சில் என் தம்பியின் மனைவி கொல்லப்பட்டார் என்பதே. என் தம்பியின் மூன்று வயதுக்குழந்தை, மற்றும் பிறந்த பச்சிளம்குழந்தை ஆகியோரின் கதி என்னவென்று தெரியாமல் இன்றும் வெளிநாடு ஒன்றில் இருந்து இரவு பகலாய் அழுகிறேன். பெற்றோரற்ற குழந்தைகள் பலரை இறுதிக் கட்டத்தில் அவ்விடத்திலேயே கொன்றதாகவும், பலரை முகாமுக்குக் கொண்டுவந்து பின்னர் இடம் அறியாத, மொழி புரியாத சிங்களப் பகுதிகளில் உள்ள சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்த்ததாகவும், பத்துவயதைக் கடந்த பலரை கருணா கும்பல், டக்ளஸ் கும்பல் ஆட்களிடம் கொடுத்ததாகவும், பெரும்பாலானோரை பௌத்த பிக்குகளிடம் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். தமிழ் கத்தோலிக்கத் திருச்சபையினர் கெஞ்சிக் கேட்டும் அந்தப் பிஞ்சுகளை அவர்களிடம் தர மறுத்து பௌத்த மத பீடங்களில் இராணுவத்தினர் சேர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. என் தம்பியும், அவன் துணைவியும் தாய் மண்ணை நேசித்தவர்கள். எத்தனையோ முறை இங்கு வா என நான் அழைத்தும் அம்மண்ணைவிட்டு வர மறுத்தவர்கள் அவர்கள். அவர்களது குழந்தைகள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. உயிரோடு இருந்தாலும் உறவுகள், சொந்தங்கள், வேர் எதுவும் அறியாது சிங்களவர்களாக, பௌத்தர்களாகவே அவர்கள் வளரப்போகிறார்கள் என்பதை நினைக்கையில் நெஞ்சு துடிக்கிறது. துக்கம் அடைக்கிறது.
  • // என் தம்பியின் மூன்று வயதுக்குழந்தை, மற்றும் பிறந்த பச்சிளம்குழந்தை ஆகியோரின் கதி என்னவென்று தெரியாமல் இன்றும் வெளிநாடு ஒன்றில் இருந்து இரவு பகலாய் அழுகிறேன. //
  •  

  • 7 . கேதா (நெருங்கிய நண்பர்):

என் குடும்பத்தினர் பலமுறை இடம்பெயர்ந்து இறுதியாய்ப் பேசியபோது முள்ளிவாய்க்காலில் இருந்தனர். அண்ணா, அண்ணி, அவர்களது குழந்தைகள் இருவர். போராளிகளாய் இருந்து வீரச்சாவைத் தழுவி இருந்தார்கள் எனது தம்பியும் அவர் மனைவியும். அவர்களது குழந்தைகள் இருவரும் என் அண்ணா, அண்ணியுடன்தான் இருந்தார்கள். இவர்களோடு எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் இருந்தார்கள். கனடாவில் உறைபனிக் குளிர்காலம். வீதிகள் எங்கும் எங்கள் மக்கள் போராட்டங்கள் நடத்தியபடி இருந்தார்கள். அமெரிக்கத் தூதரகம் முன்பு தொடர்ந்து மூன்று மாதங்களாக 24மணிநேரமும் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியபடி இருந்தார்கள். வெளியே நீரைக்கொட்டினால் ஒரு மணிநேரத்தில் அது உறைந்துவிடும். அப்படியான கடுங்குளிரிலும் கால்கள், கைகள் விறைக்க 8 மணிநேரத்துக்கு ஒரு முறை மக்கள் கூட்டம் மாற 24மணிநேரமும் நின்று தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் எம் உறவுகளுக்காய் குரல் கொடுத்தோம். மே 09ஆம் நாள், இப்படித்தான் வேலை முடிந்து, போராட்டத்தில் கலந்துவிட்டு வீடுவந்தேன். நான் கதவைத் திறக்க, என் மனைவி தொலைபேசியில் கதறும் சத்தம் கேட்டது. என்னைக்கண்டதும் ஓடிவந்து எதுவும் சொல்லமுடியாமல் ஒரு நொடி விறைத்து நின்றாள்.. பின்னர் கதறல்களுக்கு மத்தியில் 'எல்லோரும் போயிற்றினமாம்...எல்லாரும்..' என்று சொன்னாள். ஆம்.. என் அண்ணா, அண்ணி, அவர்களது குழந்தைகள், தம்பியின் குழந்தைகள், என் பெரியப்பா, பெரியம்மா என அனைவரும் இருந்த பங்கருக்குள்ளயே எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அனைவரும் சிதறிப்போனார்கள். நானும்தான்.
//அண்ணா, அண்ணி, அவர்களது குழந்தைகள், தம்பியின் குழந்தைகள், என் பெரியப்பா, பெரியம்மா என அனைவரும் இருந்த பங்கருக்குள்ளயே எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அனைவரும் சிதறிப்போனார்கள்//
  • 8 .   ஜீவன் (எனக்கு அண்ணனானவர், நெருங்கிய நண்பர்):
எனது தம்பி கிறித்தவப் பாதிரியாராக இருந்தார். ஆதரவற்ற குழந்தைகள் பலர் அவரது பாதுகாப்பில் இருந்தனர். அனாதைகள் இல்லம் ஒன்றை கிளிநொச்சியில் நடத்திவந்தார். அவ்வில்லத்தில் 43 குழந்தைகள் இருந்தன. இறுதிக்கட்டப் போரின்போது, பெற்றோர் இல்லாத அனாதைப் பெண் குழந்தைகளுக்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைச்சேர்ந்த குழந்தைகளும் இவரது பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தனர். மொத்தம் 157 குழந்தைகள் இவருடன் இருந்தனர். என் தம்பியுடன் மற்றொரு பாதிரியாரும் சேவைபுரிந்தார். மே மாதம் தொடங்கியதில் இருந்தே இவர்கள் ஒருவருக்கும் உணவு இல்லை. எப்போதாவது செல் தாக்குதல் நிறுத்தப்படும்போது, தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உடனடியாகக் கஞ்சி காய்ச்சி, தம் உயிர்கள் குறித்தும் கவலைப்படாமல் பங்கர், பங்கராகச் சென்று அதனை மக்களிடம் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கப்படும்போது மட்டும்தான் இந்தக் குழந்தைகளுக்கும் உணவு கிடைக்கும். அப்படிக் கொடுத்துவந்த தமிழர்புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் நூற்றிப் பன்னிரண்டுபேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார்கள். மே 13ஆம் நாள், இப்படிக் கஞ்சிகொடுக்க வந்த தொண்டர்களிடம் இருந்து கஞ்சியை வாங்க எத்தனித்தபோது என் தம்பியுடன் கூட சேவையாற்றிவந்த பாதிரியார் கொல்லப்பட்டார். பல தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்களும், செஞ்சோலைச் சிறார்கள் மூவரும் கொல்லப்பட்டனர். ஏனையோரை பங்கருக்குள் விட்டுவிட்டு வெளியேவந்த என் தம்பி, உணவு, தண்ணீர் இல்லாத நிலையில் மிகவும் பலவீனமாக இருந்திருக்கிறான். இருந்தும் சக பாதிரியாரது உடலைப் புதைப்பதற்காய்த் தானே குழிவெட்டி அவரைப் புதைத்துவிட்டு பங்கருக்குள் வந்தாராம். சாப்பாடு, நீர் இல்லாத நிலையில் குழந்தைகள் ஒவ்வொருவராய் மயக்கம் அடைய, இனியும் உள்ளேயே இருக்க முடியாத என்ற நிலையில் துப்பாக்கிச் சூடுகளுக்கும், எறிகணைவீச்சுக்கும் நடுவே அனைவரையும் கூட்டியபடி நடக்க ஆரம்பித்துள்ளார். அவ்வேளை பாய்ந்து வந்தது ஒர் எறிகணை. குழந்தைகளைக் கூட்டி அணைத்தபடி அருகே இருந்த பங்கருக்குள் இறங்கியிருந்திருக்கிறார். பல குழந்தைகளை உடனடியாகப் பங்கருக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகையால் அவர்கள் அங்கு நின்றிருந்த பார ஊர்தி ஒன்றின் மறைவில் பதுங்கியிருக்கிறார்கள். அவ்வேளை அந்தப் பார ஊர்தியிலேயே செல் வீழ்ந்து வெடித்ததில் 56 குழந்தைகள் அவ்விடத்திலேயே சிதறிப்போனார்கள். உயிர்ப்பயம், அச்சம், நடுக்கம் எல்லாவற்றோடும் மீதமிருந்த குழந்தைகளோடு நடக்க ஆரம்பித்தார் என் தம்பி. வழியெங்கும் பிணங்கள். பல குழந்தைகளது உடல்கள். என் தம்பியையும் அவரோடு வந்த குழந்தைகளையும் இராணுவத்தினர் கண்டதும், துப்பாக்கியை இவர் முகத்துக்கு நேரே நீட்டிச் சுட முயன்றுள்ளனர். அவர் கொஞ்சம் சிங்களம் பேசத் தெரிந்தவர். பாதிரியார் என்பதால் முன்னர் அடிக்கடி இராணுவ காப்பரண்களைக் கடந்து கொழும்பு போய் வந்தவர். அதனால் அவருக்கு ஒரு அதிகாரியைத் தெரிந்திருந்தது. அவர் பெயரை மீண்டும் மீண்டும் சொல்ல, கொஞ்சம் கோபம் தணிந்தவர்களாய் அந்த இராணுவத்தினர் தமது பாரஊர்தியில் ஏறுங்கள் என்று கூறியுள்ளனர். பார ஊர்தி வந்த வழியெங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. கொல்லப்பட்டுக் கிடந்த மக்களது உடல்களின்மீது ஏறி இறங்கும்போது பார ஊர்தியின் டயர்கள் பலமுறை அசைய மறுத்ததாம். பல நூற்றுக்கணக்கான குழந்தைகளது உடல்கள் மீது பார ஊர்தி ஏறி இறங்கும்போது 'தன்னால் முடியவில்லை... முடியவில்லை....ஏன் இதெல்லாம் நடக்கிறது..கடவுளே' என்று கதறி அழுதுள்ளார் என் தம்பி. கொண்டுவந்தவர்களை ஒரு இடத்தில் இறக்கிவிட்டபோது, அங்கிருந்த எங்கள் உறவினர் ஒருவரிடம் இதையெல்லாம் சொல்லி அழுதிருக்கிறார். மிகவும் பலவீனமாக அவர் இருந்தார் என்று அந்த உறவினர் எனக்கு சொன்னார். இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்த இராணுவத்தினர் என் தம்பியை விசாரிக்கவேண்டும் என்று சொல்லித் தனியே இழுத்திருக்கிறார்கள். அப்போது அவர் பாதுகாப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் அவரைக் கட்டி அழுதிருக்கிறார்கள். அவரைவிடச்சொல்லிக் கதறியிருக்கிறார்கள். இருந்தும் இராணுவத்தினர் அந்தக் குழந்தைகள் எதிரிலேயே என் தம்பியை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அன்றிரவு என் தம்பி மாரடைப்பில் இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இறுதிவரை உடலைத் தரவே இல்லை. பல நாட்கள் உணவு, ஆகாரம் இல்லாதிருந்ததால் ஒரு சில அடிகள் பட்டாலே இறந்துவிடும் நிலையிலேயே பலரும் இருந்தனர். ஆக, என் தம்பியும் அவர்கள் அடித்ததால்தான் இறந்திருப்பான் என்று உறவுகளும், நண்பர்களும் சொல்கின்றனர். என் தம்பியின் பாதுகாப்பில் இருந்த மிச்சக் குழந்தைகளை சிங்களப் பகுதி ஒன்றில் உள்ள அனாதைகள் இல்லத்தில் வைத்திருப்பதாக என் தம்பியின் திருச்சபையைச் சேர்ந்த பிற பாதிரிமார்கள் கூறுகின்றனர். மன்னார் கத்தோலிக்க திருச்சபையினர் எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் அந்தக் குழந்தைகளை இராணுவத்தினர் தம்மிடம் தர மறுத்துவிட்டதாக இவர்கள் தெரிவித்தார்கள்.
//பார ஊர்தி வந்த வழியெங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. கொல்லப்பட்டுக் கிடந்த மக்களது உடல்களின்மீது ஏறி இறங்கும்போது பார ஊர்தியின் டயர்கள் பலமுறை அசைய மறுத்ததாம்//
  • 9 .   சியாமளா (எனக்கு தங்கை முறையானவர்)

முல்லைத்தீவில் இருந்த ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு முட்கம்பி வேலிகளுக்குள் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம். அதில் தண்ணீர் ஏதோ ஒரு மூலையில் தருகிறார்களாம் என்பதை அறிந்த இரவிரவாக அவ்விடத்துக்கு தண்ணீர் பெறச் சென்றேன். அங்கு தண்ணீர் முடிந்திருந்தது. பல நாட்களாய் உணவு இல்லை. நீர் இல்லை. இதே நிலையில்தான் அந்த ஆயிரக் கணக்கான மக்களும் இருந்தனர். பாதி மயக்கமும், பல மைல்கள் நடந்த களைப்பிலும் படுத்திருந்தனர் அவர்கள். பித்துப் பிடித்தவர்களாய் உயிரற்ற குழந்தைகளின் உடல்களைத் தோளில்போட்டு இறுக அணைத்தபடி இருந்தார்கள் சில பெற்றோர். சிலர் உயிரற்ற உடல்களைக் கீழே கிடத்திவிட்டு, அவர்கள் தூங்குகிறார்கள் என்று நினைத்தபடி தடவிக்கொண்டே இருந்தார்கள். முகாம் எனப்படும் கம்பி வேலிகளுக்குள் போகவேண்டுமானால், தோளில் கிடக்கும் சடலத்தை எறிந்துவிட்டு வா என்று இராணுவத்தினர் கூறவும், 'இல்லை என் குழந்தை சாகவில்லை" என்று கதறி அழுது பிரற்றிய பெற்றோர் பலரைக் கண்டிருக்கிறேன். அவ்விடத்தில் நடக்கவேண்டுமானால் மிக அவதானமாக இருக்கவேண்டும். மிக நெருக்கமாய் மக்கள் இருந்தனர். காலடி எடுத்து வைக்கும்போது மற்றொருவர் உடலையோ, காலையே மிதித்துவிடத்தான் வேண்டும். இருட்டும் நெருக்கமும். நான் அதற்குள் நடந்தபோது, இப்படித்தான் ஒரு பெற்றோர் இறந்துவிட்ட தங்கள் மகளின் உடலோடு... அவள் இறக்கவில்லை... என்று அழுது பிரற்றியபடி இருந்தனர். அவ்விடத்தில் நான் காலடி எடுத்துவைத்தபோது தடுமாறி, அந்தக் குழந்தையின் கை விரல்களை தற்செயலாக மிதித்துவிட்டேன். அதற்காய். அந்தப் பெற்றோர் என்னைப் பிடித்து அடித்தபோது உள்ளத்தில் ஏற்பட்ட வலி மிகவும் அதிகமாக இருந்தது.'
//பித்துப் பிடித்தவர்களாய் உயிரற்ற குழந்தைகளின் உடல்களைத் தோளில்போட்டு இறுக அணைத்தபடி இருந்தார்கள் சில பெற்றோர். சிலர் உயிரற்ற உடல்களைக் கீழே கிடத்திவிட்டு, அவர்கள் தூங்குகிறார்கள் என்று நினைத்தபடி தடவிக்கொண்டே இருந்தார்கள். முகாம் எனப்படும் கம்பி வேலிகளுக்குள் போகவேண்டுமானால், தோளில் கிடக்கும் சடலத்தை எறிந்துவிட்டு வா என்று இராணுவத்தினர் கூறவும், 'இல்லை என் குழந்தை சாகவில்லை"//
  • 10. நிலா (நெருங்கிய தோழி):
'திருமணமாகி எனது முதலாவது குழந்தையை எதிர்பார்த்து நாங்கள் விசுவமடுவில் வசித்து வந்தோம். 2008ம் ஆண்டு மார்கழி மாதம் கடுமையான மழை வன்னியைத் தாக்கி வெள்ளத்தில் ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களின் கொட்டகைகளும் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. நெத்தலியாற்றுப் பாலம், விசுவமடு பாலம் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தன. கிளிநொச்சியை கூடுதலாகக் கைப்பற்றி மிகவும் வேகமாக மழையாக எறிகணையை வீசியபடி இராணுவத்தினர் கிழக்குநோக்கி நகரத்தொடங்க மக்கள் அலை அலையாய் வாகனங்களில் சுதந்திரபுரம், விசுவமடு, புதுக்குடியிருப்பு நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். எறிகணை வீச்சுக்கள் சற்றுக் குறைவாக இருக்கும்போதுதான் பயணம் செய்யமுடியும். கருவுற்றிருந்த நான் மருத்துவமனைக்குச் செல்வதற்கு மிகவும் அதிக நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. விசுவமடு பாலத்தைக் கடப்பதற்கு ஒரு டரக்டரில் ஏறித்தான் கடக்க வேண்டும். இல்லையெனின் இடுப்பு மட்டத்து நீரில் நடந்து கடக்கவேண்டும். அப்படிக் கடந்து அடுத்த பக்கம் சென்றபோதும் ஏமாற்றம்தான். மேற்கொண்டு போக இயலாதவாறு அனைத்து வகையான போக்குவரத்தும் தடைபட்டு இருந்தன. வீதி நிரம்ப மக்கள் அலை அலையாய் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன். மழையிலும் கூட எறிகணை வீச்சுக்கள் நிற்கவில்லை. அத்துடன் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டு வீச்சு விமானம் எனது வீட்டுக்கு மிக அருகில் குண்டுவீச்சை நடத்தி பல மக்களைக் கொன்றது. அப்போது நான் அதிர்ந்துபோனேன். கிபீர் விமானங்கள் வருவது மிகவும் அரிதாகவே கேட்கும். குண்டை வீசிய பின்னர்தான் அதன் பறப்பு ஒலி எமக்குக் கேட்கும். அதனால் நாங்கள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு எங்கள் வீட்டில் அப்போது பதுங்கு குழிகளும் அமைக்கப்படவில்லை. அன்றுதான் என்னுடைய ணீர்க்குடம் உடைந்திருக்கவேண்டும். அதன் பின் ஐந்து நாட்களின் பின்னர் எனக்கு வலி ஏற்பட நான் ஒருவாறு மருத்துவமனையைச் சென்றடைந்தேன். ஐந்து நாட்களுக்கு முன்னரே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்கள். உயிரற்ற உடலாய் எனக்கு ஒரு மகன் பிறந்தான். எனது முதற் குழந்தை இறந்தே பிறந்திருந்தது. மகனின் உடலை மருத்துவமனையிலேயே அடக்கம் செய்தோம்.